ஊட்டி: அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியில் சேர்க்கப்பட்ட இளைஞர்கள், பயிற்சி என்ற பெயரில், ஏழு மாதங்களாக சம்பளம் இல்லாமல் தவிக்கின்றனர்.அரசு போக்குவரத்துக்கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட பணிகளில் சேர, கடந்தாண்டு நவம்பரில், இளைஞர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தமிழகம் முழுக்க, லட்சக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில், சிலர் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதில், 90 சதவீதம் பேருக்கு, இதுவரை நியமன ஆணை வழங்கவில்லை; பயிற்சி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'ஓட்டுனர், நடத்துனர் பணிக்காக, சேர்க்கப்பட்ட இளைஞர்களுக்கு, பொள்ளாச்சியில், இரு மாதங்கள் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் தேறவில்லை எனக் கூறி, கோவை போக்குவரத்து கழகத்தில் பயிற்சியில் ஈடு படுத்தப்பட்டனர். பயிற்சி காலத்தில், சம்பளம் இல்லாததால், செலவினங்களை சந்திக்க திணறினர். இதனால், சொந்த ஊர்களில் உள்ள போக்குவரத்துக் கழகங்களுக்கு, அவர்களை அனுப்பி, அங்கும் பயிற்சி யில் ஈடுபடுத்துகின்றனர்' என்றனர்.பணியில் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கூறுகையில், 'ஏழு மாதங்களாக பயிற்சி என்ற பெயரில், அலைக்கழிக்கின்றனர். உரிய பயிற்சி பெற்ற பின்பும், சம்பளம் வழங்க மறுக்கின்றனர்' என்றனர். ஊட்டி கோட்ட போக்குவரத்துக்கழக மேலாளர் கணேசனிடம் கேட்ட போது, “பயிற்சியில் தேர்ச்சி பெறாத இளைஞர்களுக்கு, மீண்டும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு, பணி வழங்கப்பட்டு வருகிறது,” என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE