திருச்சி:முதியவர்கள், பார்வையற்றவர்கள், கூலி தொழிலாளார்கள் என, ஆதரவற்ற நிலையில் இருக்கும், 70 பேருக்கு தினமும், தன் வீட்டில், வாழை இலை போட்டு, மதிய உணவு வழங்கி வருகிறார். திருச்சி பீம நகரை சேர்ந்தவர் பாரதி.
இச்சேவையை, கடந்த, 10 ஆண்டுகளாக செய்து வருகிறார். உணவருந்த வரும் முதியவர்களை தன் பெற்றோராகவே பாவிக்கிறார். பகல், 12 மணி முதல், பாரதியின் வீட்டுத் திண்ணையில் முதியவர்கள் வந்து அமர தொடங்குகின்றனர். சமையில் பணி முடிந்தவுடன், சரியாக மதியம், 1 மணிக்கு சாப்பிட அழைக்கிறார். 12 பேர் மட்டுமே உட்கார்ந்து சாப்பிட கூடிய அறை என்பதால், மற்றவர்கள் காத்திருக்கின்றனர்.
வாழை இலை போட்டு, இனிப்புடன் உயர்ரக அரிசி சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், வடை, பாயாசம் என, தினமும், அந்த முதியேவர்களுக்கு தானே விருந்து பரிமாறுகிறார். சாப்பிட்டு முடிந்ததும் கைகழுவவும் உதவுகிறார். பார்வையற்றவர்கள் தங்கள் காலணியை அணிந்து செல்லும் வரை, உடனிருந்து கவனித்து அனுப்புகிறார்.
இது மட்டுமின்றி தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாளின் போது, சாப்பிட வரும் முதியோர்களுக்கு, வேஷ்டி, சேலை மற்றும் இனிப்புடன், உணவு வழங்குகிறார். இவரது சேவையை பார்த்து பாராட்டுவதோடு, பலர் உதவியும் செய்கின்றனர்.இதுப்பற்றி பாரதி கூறியதாவது: நான் சம்பாதிக்கும் காலகட்டத்தில், என் அப்பா, அம்மா இறந்து விட்டனர். ஆரம்பத்தில் வீடு உள் அலங்காரத் தொழில் செய்தேன். ஏனோ மனம் அதில் ஈடுபடவில்லை. பிள்ளைகள் இருந்தும் முதியவர்கள் பலர் சாலைகளில் சுற்றித்திரிந்தது. எனக்கு பெறும் உறுத்தலாகவோ இருந்தது.
என் பகுதியில் இருக்கும் சில ஆதவற்ற முதியோருக்கும், உணவு வாங்கி கொடுத்தேன். நாட்கள் ஆக, ஆக சாப்பாட்டுக்காக வருவோர் எண்ணிக்கை அதிகரித்தது. ஆதரவு இல்லாமல், ஒழுங்காக உணவு கிடைக்காமல், இத்தனை பேர் இருக்கிறார்களா என்று அதிர்ச்சி அடைந்தேன். முழுநேரமாக இந்த சேவையில் ஈடுபடுவது என்ற முடிவுக்கு வந்தேன். வீட்டின் கீழ் பகுதியில் இருக்கும் இரண்டு அறைகளை அவர்களுக்காகவே ஒதுக்கினேன்.
தற்போது ஒரு அறையில் சமையல், இன்னொரு அறையில் சாப்பாடு வழங்குகிறேன். கடந்த, 2004ல் ஆம்பித்த போது, முதல் இரண்டு நாள், 500 பேருக்கு குறையாமல் வந்தனர். அப்போது அவர்களிடம், நாளை வரும் போது, உங்களது ரேஷன் கார்டுகளை கொண்டு வர கூறினேன். அதனால் பாதிபேர் குறைந்தனர். மறுநாள் வந்திருந்தவர்களிடம், ரேஷன் கார்டை ஜெராக்ஸ் எடுத்து வர கூறினேன். அதிலும், பாதிபேர் குறைந்தனர். இதில், உண்மையாகவே சாப்பாட்டுக்கு கஷ்ட படுபவர்கள் மட்டும், ரேஷன் கார்டுடன் வந்தனர்.
அவர்களில் சிலருக்கு மட்டும் முதியோர் உதவித்தொகை பெற வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தேன். இப்போது அவர்களில் சிலர் இறந்து விட்டனர். தற்போது, உண்மையாக கஷ்டப்படும், 70 பேர் மட்டுமே மதிய உணவு சாப்பிட வருகின்றனர்.
வயதானவர்கள் சாப்பிடும் உணவு என்பதால் சமைப்பதிலும், மிக கவனமாக இருக்கிறேன். 2004ல் இந்த சேவையை நான் தொடங்கியது முதலே, புஷ்பவள்ளி என்ற மூதாட்டி தான் சமைக்கிறார். மாலை, 3 மணிக்கு உணவு தீர்ந்து விடும். அதன் பின் யாராவது வந்தால், உடனே சமைத்து மாலை, 5 மணி வரை சாப்பாடு வழங்குகிறேன்.
இதை நான் அன்னதானமாக நினைக்கவில்லை. இங்கு சாப்பிடுபவர்கள் எல்லோரையும், என்னை பெற்றெடுத்து தாய், தந்தையாக கருதுகிறேன். தாய் தந்தைக்கு சோறு போடுவது எப்படி தானமாகும். இதை என் கடமையாக கருதி செய்கிறேன்.இது குறித்து யாரிடம்மும் எந்த உதவியும் கேட்பது இல்லை, ஆரம்பரத்தில் என் நண்பர்களிடம் தெரிவித்தேன்.
அவர்கள் மூலமாக வந்த சிலர் தான் எனக்கு காஸ், அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் தருகின்றனர். தற்போது தகவல் தெரிந்து ஒவ்வொருவராக வந்து உதவுகின்றனர்.இன்னும் பத்து இடங்களில் இச்சேவையை துவங்க எண்ணம் உள்ளது. பிறந்த நாளுக்கு உதவ நினைப்பவர்கள், 365 நாள்களிலும் உதவி செய்ய நினைத்தால், இத்திட்டத்தை திருச்சி முழுவதும், பத்துக்கு மேற்பட்ட இடங்களில் துவங்குவேன். எல்லாத் திட்டத்துக்கும் அரசிடம் உதவி கேட்பதை விட, இது போன்ற அன்னதான திட்டத்துக்கு பலர் உதவினால், ஏழை, எளிய, ஆதரவற்றவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி விடலாம், இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE