தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக, நேற்று முன்தினம், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக, சரத்குமார் அணிக்கு ஆதரவாக, நடிகை எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து, நடிகர் சங்க வட்டாரத்தில் விசாரித்ததில், கிடைத்த தகவல்கள்:
* 'தேர்தலில் போட்டி வேண்டாம்; இரு தரப்பினரும் சுமுகமாக பேசி தீர்வு காணலாம்' என, விஷால் அணியில் உள்ள முக்கிய நடிகர்கள் மற்றும் மூத்த நடிகர்களிடம் ராதிகா பேசினார்; ஆனால், யாரும் அதற்கு சம்மதிக்கவில்லை.
* அதனால், நிருபர்கள் சந்திப்பு மூலம், தன் கருத்தை விஷால் அணிக்கு தெரிவிக்க, ராதிகா முடிவு செய்தார். இதுகுறித்து, தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவுக்கு தகவல் தெரிவித்தார். அதற்கு முன் சினிமா சங்கங்களின் கூட்டு குழு கூட்டம் நடக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
* உடனே, தாணுவின் ஏற்பாட்டில், சென்னையில், சினிமா சங்கங்களின் கூட்டு குழு கூட்டம் நடந்தது. 'தேர்தல் நடந்தால், நடிகர்களிடம் பிளவு ஏற்படும். இது யாருக்கும் நல்லது அல்ல. இரு அணியினரையும் வரும், 10ம் தேதி, அழைத்து பேசி தேர்தல் இல்லாமல் நிர்வாகிகளை நியமிக்கலாம்' என, இதில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு சரத்குமார் அணிக்கு ஆதரவாக இருந்தது.
* இத்தகவல் விஷால் அணிக்கு தெரிவிக்கப்பட்டது. 'தயாரிப்பாளர் சங்க தேர்தல், நீதிமன்றம் வரை சென்று நடந்தது; தேர்தலுக்கு பிறகு, தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக தான் உள்ளனர். அதுபோல், நடிகர்களும் தேர்தலுக்கு பின், ஒற்றுமையாக இருப்பர். இதுபற்றி, தயாரிப்பாளர்கள் கவலைப்பட வேண்டாம்' என, விஷால் அணியினர் திட்டவட்டமாக கூறி விட்டனர்.
* இதன்பின், தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள சரத்குமார் விசுவாசி ஒருவர், ராதிகாவிடம் பேசினார். 'நீங்கள் கூறியபடி, கூட்டு குழு கூட்டம் நடந்தது; அதில் எடுக்கப்பட்ட முடிவை விஷால் அணி ஏற்கவில்லை. தற்போதைய நிலை நீடித்தால், விஷால் அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. எனவே, நீங்களே முடிவு எடுத்து கொள்வது தான் சிறந்த வழி' என, தெரிவித்தார்.
* இதன் பிறகே, ராதிகா தரப்பில் நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ராதிகாவும், நடிகர் சிம்புவும் தங்கள் ஆத்திரத்தை கொட்டினர். ராதிகா, 'விஷால் ரெட்டி' என, ஜாதியை குறிப்பிட்டு பேசினார். சிம்புவோ, 'ராதாரவி இவர்களை, நாய் என, திட்டியதாக கூறப்பட்டது. நரி என, கூறியிருக்க வேண்டும்' என்றார். மேலும், விஷாலை, ஒருமையில், 'நீ, அவன்' என, சிம்பு பேசியது விஷால் அணியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
* சினிமா சங்கங்களை சேர்ந்த பலரும், விஷால் அணியினரை தொடர்பு கொண்டு, 'தேர்தலில் இருந்து வாபஸ் பெற வேண்டாம்' என, வலியுறுத்தினர்.
* இதன் பிறகே, விஷால் அணி சார்பில், 'பாண்டவர் அணி' என்ற பெயரில், சினிமா கூட்டுக்குழு கூட்டத்தின் முடிவுகளை விமர்சித்து அறிக்கை வெளியிடப்பட்டது.இவ்வாறு நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து விஷால் அணியினர் கூறியதாவது:சரத்குமார் அணி சார்பில், வரும், 11ம் தேதி நடக்க உள்ள தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் தான், அவர்கள் இஷ்டத்திற்கு பேசுவர் என்றிருந்தோம். ஆனால், தேர்தல் பயத்தில் முன்கூட்டியே அவர்கள் மனம் திறந்து பேசியதால், அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்பதை முழுமையாக நன்கு அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இது, எங்களுக்கு நல்லதாகத் தான் அமையும்.நடிகர் சங்க நல விரும்பிகளாக தங்களை காட்டிக் கொள்ளும் ராதிகாவும், சிம்புவும், திடீரென மனம் திறந்து பேசியதன் விளைவு, தேர்தல் முடிவில் தெரிய வரும்.இவ்வாறு விஷால் அணியினர் கூறினர்.
பின்னணியில் இருப்பது யார்:'
பிரபல அரசியல் குடும்பத்தை சேர்ந்தவரும், இளம் நடிகருமான ஒருவர் தான் விஷால் அணிக்கு ஆதரவாக செயல்படுகிறார்; செலவுகளை பார்த்து கொள்கிறார்' என, தகவல்கள் கசிந்தன.
ஆனால், நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர், 'எங்களால் முடிந்த நியாயமான செலவுகளை செய்து வருகிறோம். அரசியல் முக்கியத்துவம் உள்ளவர்களால், எந்த உதவியும் செய்யப்படவில்லை. எதிர் அணியினர் பரபரப்பை ஏற்படுத்த, இஷ் டத்திற்கு தவறாக பேசி வருகின்றனர்' என்றனர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்க திணறல்:
'விஷால் அணியின் தேர்தல் அறிக்கையில், புதிய கட்டடம் உட்பட, 42 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை தாண்டி, வேறு எதையும் புதிதாக அறிவிக்க முடியாது. அப்படி அறிவித்தாலும், நம்பும்படியாக இருக்காது' என, சரத்குமார் அணிக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருதுகிறது.
எனவே, தேர்தல் அறிக்கையை தயார் செய்வதில் திணறி வருகிறது. தற்போது வரை, தேர்தல் அறிக்கை முழு வடிவம் பெறவில்லை என, கூறப்படுகிறது.
சந்தேகம் தரும் சங்க செலவுகள்:
நடிகர் சங்க செலவுகள் குறித்து விஷால் அணியினர் பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
* சினிமாவுக்கு சேவை வரி விலக்கு அளிக்க கோரி, நடிகர், நடிகையர் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதற்கு, 12 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளதாக எழுதப்பட்டுள்ளது
* இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நடந்த உண்ணாவிரதத்திற்கு, 5.5 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது
* நடிகர் சங்க வளாகத்தில் உள்ள கோவில் கும்பாபிஷேகத்திற்கு, 4.5 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது
* அந்த கோவிலை இடிக்க, 2.5 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது
* நடிப்பு பயிற்சி அளிக்க, பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இவ்வளவு தொகை செலவாகியிருக்குமா என, விஷால் அணியினர் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.
- நமது நிருபர் -
'முதல்வர் ஜெயலலிதா அழைத்து பேசினாலும் வாபஸ் கிடையாது'
நாடக நடிகர்களிடம் ஓட்டு கேட்க, நேற்று சேலம் வந்த, நடிகர் விஷால் தலைமையிலான, 23 நடிகர், நடிகையர் நிருபர்களை சந்தித்தனர். அப்போது, விஷால் கூறியதாவது:
வரும், 18ல் நடிகர் சங்க தேர்தல் நடக்கிறது; இதில், அனைத்து உறுப்பினர்களும் ஓட்டு போட வேண்டும். சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், காரைக்குடி, மதுரை என, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறோம்.சமாதானம் பேசுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமாதானம், வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. சமரசத்தை மதிக்கிறோம். எங்களுடைய உணர்வுகளை மதித்து, நடிகர்கள் ஆதரவு அளிப்பதால் தேர்தல் நடக்கும்.
தேர்தலில் வெற்றி பெற்று, நிர்வாக பதவிகளை தேர்வு செய்தால் மட்டுமே, திறம்பட செயல்பட முடியும். நடிகர் சங்கம் என்றில்லாமல், தயாரிப்பாளர் சங்கம் உட்பட, அனைவரும் குடும்பமாகவே செயல்படுகிறோம்; தேர்தலுக்கு பின்னரும், இந்நிலை தொடரும்.நடிகர் சங்க கட்டடம் குறித்து, மூன்றாண்டுகளுக்கு முன்னரே கேள்வி எழுப்பியும், 45 கடிதங்கள் அனுப்பியும், எந்த பதிலும் கிடைக்காததால் தான், தேர்தலில் நிற்க முடிவு செய்தோம். நடிகர் சங்கத்துக்கு சொந்தமான, 19 கிரவுண்ட் நிலத்தை மீட்போம். இளைஞர்கள் கையில், நடிகர் சங்கம் வரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பின், நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர் கூறியதாவது:நடிகர் சங்கத்தில், தான் ஒரு கவுரவ உறுப்பினர் என்ற முறையில், முதல்வர் ஜெயலலிதா, உங்களை அழைத்துப் பேசினால், சமாதானத்தை ஏற்பீர்களா?சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நீங்கள், இந்த பிரச்னையை பெரிதுபடுத்தப் பார்க்கிறீர்கள்; யார் அழைத்தாலும் சமாதானம் இல்லை.
முதல்வர் ஜெ.,வை சந்தித்து, ஆதரவு கேட்டீர்களா?
முதல்வரை சந்திக்க கடிதம் கொடுத்து, ஒரு மாதத்துக்கு மேல் ஆகி விட்டது; அனுமதி கிடைக்கவில்லை. கவுரவ உறுப்பினர் என்ற முறையில், தேர்தலில் ஓட்டு போட அவர் வந்தால், அதை விட பெருமை எதுவும் இல்லை; அதுவே வெற்றியுமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
பாக்யராஜ்மாறியது ஏன்:நடிகர் பாக்கியராஜ் மகன் சாந்தனுகூறுகையில், ''என் தந்தை, எதிர் அணியின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக, அவரை, அந்த அணி என்று சொல்லிவிட முடியாது. அவருக்கு, எந்த அணி நல்லது செய்யும் என்பது தெரியும். ஓட்டுப்பதிவு நெருங்கும்போது, நல்லவர் அணிக்கு ஆதரவு தருவார்,'' என்றார்.
'12 ரூபாய் கட்டவில்லை எனக்கூறி சங்கத்தில் இருந்து நீக்கி விட்டனர்'
நான், 1990ல் இருந்து, நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக உள்ளேன். கடந்த டிசம்பரில்,
உறுப்பினர் கட்டணம், 12 ரூபாய் கட்டவில்லை எனக்கூறி, சில தினங்களுக்கு முன், என்னை நடிகர் சங்க உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர்.
இப்போது எந்த நடிகர், உறுப்பினர் கட்டணம் கட்டுகிறார்? எவருமே கட்டுவதில்லை. என்னை
சங்கத்தில் இருந்து நீக்கி விட்டால், நடிகனாகஇல்லாமல் போய் விடுவேனா?நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணிக்குஆதரவு தெரிவித்தேன். அதற்காகவே என்னை திட்டமிட்டு நீக்கியுள்ளனர். ஓட்டுப் பதிவின் போது,நீதிபதியிடம் முறையிடுவேன். அவர் அனுமதியளித்தால் ஓட்டு போடுவேன்; இதற்காக, நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை.
நான் தயாரித்துள்ள, 'அதிரடி' திரைப்படம் வரும், 16ம் தேதி திரைக்கு வருகிறது. அதை
வராமல் தடுப்பதோடு, அப்படம் குறித்த செய்திகளும், பத்திரிகைகளில் வருவதை சரத்குமார் தடுக்கிறார். திட்டமிட்டபடி திரைப்படம், 16ம் தேதி வெளியாகும்.- நடிகரும், தயாரிப்பாளருமான மன்சூர் அலிகான்.