வடபழனி : வடபழனி முருகன் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த விசாக மற்றும் விடையாற்றி விழா நிறைவு பெறுகிறது.வடபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வைகாசி விசாக பிரமோற்சவ திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி துவங்கியது. விசாக விழா பத்து நாள், விடையாற்றி விழா என 20 நாட்கள் பிரமோற்சவ திருவிழா சிறப்பாக நடந்தது.பிரமோற்சவத்தை ஒட்டி நாள் தோறும் முருகப் பெருமானுக்கு விசேஷ வழிபாடுகளும், அபிஷேக ஆராதனைகளும், அதை தொடர்ந்து காலை மற்றும் இரவு வேளைகளில் சுவாமி புறப்பாடு நடந்தது.
விசாகத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. 27ம் தேதி வள்ளி தேவயானையுடன் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மே 29ம் தேதி முதல் இன்று வரை, பத்து நாட்கள் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.இதற்காக, இரவு வேளைகளில் இன்னிசை கச்சேரிகளும், கதாகாலட்சேபங்களும் நடைபெற்று வருகின்றன. சிறப்பாக நடைபெற்ற விசாக மற்றும் விடையாற்றித் திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE