சென்னை : ""காங்கிரசை கருணாநிதி மிரட்டிய காலம் போய், காங்கிரசை கண்டு அஞ்சும் நிலை வந்து விட்டது என்பது கருணாநிதியின் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அவர், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "கை'யும் கை நழுவிப் போய்விடுமோ என்ற அச்சத்தில், தி.மு.க., - காங்கிரஸ் இடையே சிண்டு முடிய நான் முயற்சிப்பதாக, ஒரு அறிக்கையை கருணாநிதி வெளியிட்டிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல். "இந்தி எதிர்ப்பு போராட்டம்' குறித்து நீட்டி முழக்கியிருக்கிறார் கருணாநிதி. அரசியல் பதவிகளை அடைய அன்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கருணாநிதி தான், இன்று ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள தமிழினத்தையே அழித்தார். கருணாநிதியின் இந்தி எதிர்ப்பு என்பது ஊருக்கு உபதேசம். கருணாநிதியைப் பொறுத்தவரை, இந்தி எதிர்ப்பு, தமிழ்ப்பற்று என்பதெல்லாம் வெளிவேஷம். ஆட்சி அதிகாரத்திற்காக, தன் நிலையை காலத்திற்கேற்றாற்போல் மாற்றிக் கொள்ளும் தன்மையை உடையவர் கருணாநிதி. கருணாநிதியின் எந்தப் போராட்டத்தையும் தமிழக மக்கள் நம்பத் தயாராக இல்லை.
தி.மு.க.,விற்கும், காங்கிரசுக்கும் இடையே கலகமூட்டும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளதாக கருணாநிதி தெரிவிப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இளைஞன் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, "ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய தொகை. அந்த தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா?' என பேசியிருக்கிறார். ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று விட்டதாக, பத்திரிகைகள் தானே பூதாகரமாக ஆக்குகின்றன? என தனக்குத் தானே ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டு, அதற்கு, "ஒரு சில பத்திரிகைகளும், ஒரு சில எதிர்க்கட்சிக்காரர்களும் தான் பூதாகரமாக இந்த பிரச்னையை ஆக்கி, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை ஏதோ ஒரு தனிப்பட்ட நபர் அப்படியே அவருடைய வீட்டிற்கு தூக்கிக் கொண்டு போய்விட்டதைப் போலவும், அந்தத் தொகையை, ஒரு சிலர் பங்கிட்டுக் கொண்டதைப் போலவும், அதற்காக பார்லிமென்ட்டையே நடத்தவிட மாட்டோம் என பேசினார்கள், எழுதினார்கள்' என குறிப்பிட்டிருக்கிறார் கருணாநிதி.
இதிலிருந்து ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜாவுக்கு மட்டும் பங்கில்லை, மற்றவர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதை இரண்டு முறை கூறியிருக்கிறார் கருணாநிதி என்பது தெளிவாகிறது. இதைத் தான் நான் குறிப்பிட்டேன். ஆனால், நேற்றைய அறிக்கையில், "இளைஞன் திரைப்பட விழாவில், ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய தொகை, அந்தத் தொகையை ஊழல் செய்திருக்க முடியுமா?' என தான் பேசியதாகவும், இதை வைத்து தி.மு.க.,வுக்கும் காங்கிரசுக்கும் இடையே நான் சிண்டு முடியப் பார்ப்பதாவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். ஓர் உண்மையை கருணாநிதி மறைத்து விட்டார். இளைஞன் திரைப்பட விழாவில் தான் சொன்ன "ஒருவர்' என்ற வார்த்தையை தனக்கு வசதியாக எடுத்து விட்டார் கருணாநிதி. மொத்தத்தில், காங்கிரசை கருணாநிதி மிரட்டிய காலம் போய், காங்கிரசை கண்டு கருணாநிதி அஞ்சுகின்ற காலம் வந்து விட்டது என்பது கருணாநிதியின் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. என்ன தான் புலம்பினாலும், மைனாரிட்டி ஆட்சி வீழ்வது உறுதி. இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.