ராஜபாளையம்: தண்ணீரை மின்பகுப்பாய்வு செய்து வாயு உருவாக்கி, அதன் மூலம் டூவீலரை இயக்கும் முறையை ராஜபாளையத்தை சேர்ந்த பொறியியல் கல்லுாரி மாணவர் ராம் கிஷோர் கண்டுபிடித்து உள்ளார்.
வாகனங்கள் பெட்ரோல், டீசல், காஸ், போன்றவற்றால் ஓடுவது வழக்கமாக உள்ளது. எரிபொருள் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் பலர் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுகின்றனர். தற்போதைய நிலையில் மின்பற்றாக்குறையால் இந்த வாகனங்களுக்கும் சிக்கல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு தண்ணீர் மூலம் டூ வீலரை இயக்கும் முறையை ராஜபாளையம் முகில்வண்ணம்பிள்ளை தெருவை சேர்ந்த முரளிராஜா மகன் ராம் கிஷோர் கண்டுபிடித்து உள்ளார். இவர் கரூர் தனியார் பொறியியல் கல்லுாரியில் மெக்கானிக்கல் பிரிவில் 4ம் ஆண்டு படிக்கிறார்.
மின்பகுப்பு முறை:
மாணவர் கூறுகையில், “சுற்றுசூழல் மாசு, பொருளாதாரம் மேம்பாடு கருத்தில்கொண்டு தண்ணீர் வாகனத்தை இயக்க பல மாதங்களாக யோசித்தேன். பெட்ரோலிய பொருட்களை விட ஹைட்ரஜன் சிறந்த எரிபொருள். மின்பகுப்பு முறையில் ஹைட்ரஜன் பெறப்படுவது வழக்கம். தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன், ஆக்சிஜன் வாயுக்கள் மின்பகுப்பு முறையில் பிரிக்கப்படுகிறது. இது வாயுகலனில் சேகரிப்படுகிறது. பின் ஹைட்ரஜன் வாயுவால் தீப்பிடிக்காமல் இருக்க 'பில்டர்' செய்யப்பட்டு, டூ வீலரின் கார்ப்ரேட்டருக்கு ஹைட்ரஜன் செல்கிறது.
பெட்ரோல்:
அதற்கு முன் வெளிக்காற்றுடன் சேர்ந்து வாயுக்கலவையாக மாறி கார்ப்ரேட்டர் செல்லும் வினை நிகழ்கிறது. பின் சிறிதளவு பெட்ரோல், கூலிங்ஆயிலுடன் இன்ஜினுக்கு செல்லும்போது, டூ வீலர் இயங்க தயாராகிறது. தண்ணீர் எரிபொருள் போல் செயல்படும் இந்த முறைக்கு மாற, வாகனங்களுக்கு ஏற்றவாறு 15 ஆயிரம் ரூபாய் முதல் செலவாகும். மூன்று லிட்டர் டேங்கில் 2.5 லிட்டர் தண்ணீர் ஊற்றி டூ வீலரை இயக்கலாம். நுாறு கி.மீ., மேல் செல்லும் வாய்ப்பு உள்ளது,” என்றார்.