பிரெட் போன்ற பேக்கரி பொருட்களில் பயன்படுத்தப்படும், 'பொட்டாசியம் புரோமேட்' மற்றும் ஜாம், சாக்லேட், பால் பொருட்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும்,'சைக்ளாமேட்' ஆகிய ரசாயன பொருட்கள், புற்றுநோயை உண்டாக்குவதாக ஆய்வில் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அதன்படி, பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் இருந்த சட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் உணவு பொருட்களின் தயாரிப்பு, சேமித்து வைத்தல், வினியோகம், விற்பனை, இறக்குமதி ஆகியவற்றில் தரத்தை உறுதி செய்வதற்காக, எப்.எஸ்.ஏ.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பு, கடந்த, 2011ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
ஆய்வறிக்கை: இதற்கிடையே, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் எனப்படும் அரசு சாரா அமைப்பு, கடந்த மாதம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், நாட்டில் விற்கப்படும், 38 வகையான பிரெட் வகைகளில், 84 சதவீத பிரெட்களில், பொட்டாசியம் புரோமேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட் எனப்படும் புற்றுநோயை உருவாக்கக் கூடிய, ரசாயன பொருட்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவின் சுவையை அதிகரிப்பதற்கும், மிருதுவாவதற்கும், கெடாமல் இருப்பதற்கும், இந்த ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன பல்வேறு நாடுகளில், பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியதாக இந்த பொருட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது, நாடெங்கும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, பொட்டாசியம் புரோமேட் பயன்படுத்துவதை நிறுத்துவதாக, பிரெட் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித் திருந்தன.
இந்த நிலையில், பொட்டாசியம் புரோமேட் மற்றும் சைக்ளாமேட் ஆகியவற்றுக்கு, மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது. இதை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பு, நேற்று அறிவித்துள்ளது.
உடனடியாக...: பொட்டாசியம் புரோமேட், பிரெட் மற்றும் பேக்கரி தயாரிப்பு உணவு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. ஜாம், ஜெல்லி, சாக்லேட்கள், பால் பொருட்கள் ஆகியவற்றில் சைக்ளாமேட் பயன்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த பொருட்களுக்கான தடை, உடனடியாக அமலுக்கு வருகிறது.
குளிர்பானம் மது வகைகள்: பல்வேறு வகையான உணவு பொருட்களில் பயன்படுத்தப்படும் உணவு பதப்படுத்தும் பொருட்கள் குறித்து கண்காணித்து வருகிறது, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பு. மேலும் அவ்வப்போது, சந்தையில் விற்கப்படும் பொருட்களின் தரத்தையும் பரிசோதித்து வருகிறது.
அதேபோல் ஒவ்வொரு வகையான உணவு பொருட்களுக்கான தரத்தையும் நிர்ணயித்து வருகிறது. அந்த வரிசையில், அடுத்ததாக, குளிர்பானங்கள் குறித்த பொதுமக்களின் கருத்தை, இந்த அமைப்பு கோரி உள்ளது.மேலும், சர்வதேச மது தரத்துக்கு இணையாக, இந்தியாவிலும் மது வகைகள் தயாரிக்க, இந்த அமைப்பு முனைந்துள்ளது. அதற்கான பதப்படுத்தும் பொருட்களின் பட்டியலை இறுதி செய்து வருகிறது.இதன் மூலம், இந்திய உணவு பொருட்களுக்கான தரத்தை நிர்ணயிப்பதில் மிகப் பெரிய முன்னேற்றத்தை, இந்த அமைப்பு ஏற்படுத்தி வருகிறது.
11 ஆயிரம் பொருட்கள்::
* உணவு பொருட்கள் தயாரிப்பில் உள்ள நிறுவனங்கள், அவை நீண்ட காலம் கெடாமல் இருக்க, பல்வேறு ரசாயன பொருட்களை பயன்படுத்துகின்றன
* இந்த பொருட்கள் குறித்த பட்டியலை, தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பு வெளியிட்டுள்ளது
* இந்த பட்டியலில், 11 ஆயிரம் பொருட்கள் இடம்பெற்றுள்ளன
* கடந்த, 2013ல் ஆரம்பித்த, அறிவியல்பூர்வமான ஆய்வுகளைத் தொடர்ந்து, தற்போது இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பொட்டாசியம் அயோடேட் குறித்தும், அரசு சாரா அமைப்பின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயன்படும் மாவு கெடாமல் இருக்க, இது பயன்படுத்தப்படுகிறது.
இது குறித்து ஆய்வகச் சோதனை நடந்து வருகிறது. அதன் பின், இந்தப் பொருளுக்கு தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
பவன் அகர்வால் தலைமை செயல் அதிகாரி,
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பு
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE