புதுடில்லி: 'சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்' என்ற, ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை ஏற்று, அரசாணையை வெளியிட்டுள்ளது, மத்திய அரசு.
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி அளிக்கும், ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளுக்கு, மத்திய அமைச்சரவை, கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, இந்த சம்பள உயர்வை அமல்படுத்தும் வகையிலான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் வேலைத் திறனை அதிகரிக்கவும், சரியாக வேலை செய்யாதவர்களுக்கு, பதவி உயர்வு, சம்பள உயர்வை ரத்து செய்வது குறித்தும், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள, எம்.ஏ.சி.பி., எனப்படும், 'மாற்றியமைக்கப்பட்ட உறுதியான பணி முன்னேற்றம்' திட்டத்தின்படி, 10, 20, 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் ஊழியர் களின் சம்பளம், அடுத்த நிலைக்கு தானாகவே உயர்த்தப்படும்; இதைத் தொடருவதற்கு கமிஷன் அளித்த பரிந்துரையை அரசு ஏற்றுள்ளது.
அதே நேரத்தில் இதில் சில மாற்றங்கள் செய்து, கமிஷன் அளித்துள்ள பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாவது: சிறப்பாக வேலை செய்யாவிட்டாலும், சம்பளம் உயரும் என்ற மனநிலையில், மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். சிறப்பாக பணியாற்றும்
ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை, அரசு ஊழியர்கள் தவறாக எடுத்துக் கொண்டுள்ளனர்.
சிறந்த முறையில் பணியாற்றுபவர்களுக்கே சம்பள உயர்வு, பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும். அதன்படி, 'மாற்றியமைக்கப்பட்ட உறுதியான பணி முன்னேற்றம்' திட்டத்தின்படி, முதல், 20 ஆண்டுகளில், சிறப்பாக பணிபுரியாத ஊழியர்களுக்கான, சம்பள உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்.
மேலும், வழக்கமான பதவிஉயர்வுக்கான அடிப்படை தகுதியையும், நன்று என்பதில் இருந்து மிகநன்று என்று உயர்த்த வேண்டும்.இவ்வாறு கமிஷன் பரிந்துரை செய்திருந்தது.இந்தப் பரிந்துரையை, மத்திய அரசு அப்படியே ஏற்று, அரசாணையிலும் அது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 'இனி சிறப்பாக பணியாற்றாத, அரசு ஊழியர்களுக்கு, சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்காது' என, நிதித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
'தகவலை மறைத்தால் வேலையிலிருந்து நீக்கலாம்'
''பணியில் சேருவதற்கு முன்போ, பணியில் இருக்கும்போதோ, தன் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், கைது செய்யப்பட்டது, விடுதலை செய்யப்பட்டது உள்ளிட்ட தகவலை, ஊழியர்கள் மறைத்தால், அவர்களை பணியில் இருந்து நீக்கும் அதிகாரம் வேலை அளிப்போருக்கு உள்ளது,'' என்று, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
அரசுப் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து, அவ்தார் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், அருண் மிஸ்ரா, பிரபுல்ல பந்த் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு பிறப்பித்துள்ள தீர்ப்பில்கூறியுள்ளதாவது:
பணியில் ஒருவர் சேரும்போது அல்லது பணியில் இருக்கும்போது, தன் மீது உள்ள வழக்குகள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை மறைக்கக் கூடாது. இவ்வாறு மறைத்து பெறும் பணி உத்தரவு செல்லாது என்று உத்தரவிடுவதற்கு வேலை அளிப்போருக்கு அதிகாரம் உள்ளது.
அதே நேரத்தில், ஊழியரால் மறைக்கப்பட்ட தகவல்களால் ஏற்படக் கூடிய பாதிப்பு, அதன் தன்மை, அது நடந்த காலம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், இந்த முடிவை வேலை அளிப்போர் எடுக்க வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
அடுத்த மாதம் முதல்புது சம்பளம் கிடைக்கும்:
* மத்திய அரசு ஊழியர்களுக்கு, சம்பள உயர்வு அளிக்கும் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது* இதன்படி, வரும் ஆகஸ்ட் மாதம் முதல், உயர்த்தப்பட்ட சம்பளம் கிடைக்கும்* இதன் மூலம், 53 லட்சம் ஓய்வூதியதாரர்கள், 47 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவர். 'இந்த ஊதிய உயர்வால், மத்திய அரசுக்கு, 1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது* அரசாணையின்படி, மத்திய அரசு ஊழியர் களுக்கான குறைந்தபட்ச சம்பளம், 7,000 ரூபா யில் இருந்து, 18 ஆயிரம் ரூபாயாக உயர்கிறது.அதிகபட்ச சம்பளம், 90 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது*l பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில், ஆண்டு ஊதிய உயர்வு, ஜனவரி, 1 அல்லது ஜூலை, 1ம் தேதிகளில் உயர்த்தப்படும். ஆண்டு ஊதிய உயர்வு, 3 சதவீதமாக இருக்கும்* ஊழியர்களின் சம்பள உயர்வு சராசரியாக, 2.57 மடங்காக இருக்கும்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (62)
Reply
Reply
Reply