புதுடில்லி: சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியத்தின் கீழ் படிக்கும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மீண்டும் போர்டு தேர்வு முறை கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு, 2010ல் நீக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்துவது குறைந்துள்ளது. அதே நேரத்தில், மாணவர்களின் கல்வித்திறன் குறைந்து வருவதாக பெற்றோரும், கல்வியாளர்களும் கூறி வந்தனர். இது தொடர்பாக, பல்வேறு தரப்பிடமிருந்து மத்திய அரசு கருத்து கேட்டது. '10ம் வகுப்புக்கு, பொது தேர்வை மீண்டும் அறிமுகம் செய்யலாம்' என, பலர் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம், 25ல் டில்லியில் நடக்க உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த கூட்டத்துக்கு பின், 10ம் வகுப்புக்கு, பொது தேர்வை மீண்டும் நடத்துவது குறித்து, பிரகாஷ் ஜாவடேகர் அறிவிப்பார் என, எதிர் பார்க்கப்படுகிறது. வரும், 2018 முதல் பொதுத்தேர்வு நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE