திருப்பூர்:திருப்பூரில் ஜவுளிக்கடை அதிபரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், பெண்களை கட்டி வைத்து மூன்று பவுன் தங்கச்செயினை பறித்துச் சென்றனர்.திருப்பூர் மெஷின் வீதி நந்தவனத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முகமது தாகிர்; காமராஜ் ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மேல்மாடி வீட்டில், நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு முகமது தாகீர் மனைவி பத்ருனிஷா (61) மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண் இருந்துள்ளனர்.அருகில் உள்ள டியூசன் சென்டருக்கு, குழந்தையை அழைத்து வர அவரது மருமகள் சென்றுள்ளார்.
முன்பக்க கதவை அவர் மூடவில்லை; அவ்வழியாக வீட்டுக்குள் புகுந்த நபர்கள், மேல்மாடிக்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி பத்ருனிசா மற்றும் வேலைக்கார பெண்ணை கயிறால் கட்டி வைத்தனர்; பின், பத்ருனிசாவின் இடது கையை கத்தியால் கிழித்து மிரட்டி, அவர் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கசெயினை பறித்தனர். பீரோ சாவியை கேட்டு கொண்டிருந்தபோது, ஆட்கள் வரும் சத்தம் கேட்டதால், தப்பியோடிய அவர்கள் ரோட்டில் நிறுத்தியிருந்த பைக்கில் ஏறி தப்பினர். திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE