போபால் : மத்திய பிரதேச மாநிலம், போபால் சிறையில் இருந்து தப்பிய, 'சிமி' பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்குள்ள சிறைகளில் மின்வேலி அமைக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தப்பிய பயங்கரவாதிகள்:
மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள, சிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும், ம.பி.,யின் போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். சில நாட்களுக்கு முன், சிறை காவலர் ஒருவரை கொலை செய்த இந்த பயங்கரவாதிகள், பின் சிறையில் இருந்து தப்பிச் சென்றனர்.
நீதி விசாரணை :
போலீசார் நடத்திய என்கவுன்டரில், எட்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்தன; அம்மாநில ஐகோர்ட்டில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து, நீதி விசாரணை நடத்த, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள சிறைகளில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மின்வேலி :
இதுகுறித்து, ம.பி., மாநில சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி., சஞ்சய் சவுத்ரி கூறியதாவது: ம.பி.,யில் உள்ள, 122 சிறைகளில், பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக, ஆலோசனை நடத்தி வருகிறோம். சத்தீஸ்கர் சிறைகளை போல, இங்கும், சிறை வளாகத்தில் மின்வேலி அமைக்க முடிவு செய்துள்ளோம்; இதற்காக, அங்கு சென்று பார்வையிட்டு வர, போலீஸ் அதிகாரிகள் குழு, சென்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE