சிங்கார சென்னையின் சிட்டு... ஜில்லென மணம் வீசும் மலர் மொட்டு... கண்கள் இரண்டும் கயல் வெட்டு.... உடலோ தேக்கு மரக்கட்டு... கலை உலகில் இவர் தனி மெட்டு... கம்பன் தீட்டிய காவிய பாட்டு...இவர் விரும்புவதோ காஞ்சி பட்டு... ரவிவர்மன் தீட்டிய உயிர் ஓவியம்... ரம்யா.
பாலுமகேந்திரா இயக்கத்தில் தேசிய விருதுபெற்ற “தலைமுறைகள்” படத்தின் நாயகி
'தினமலர்' வாசகர்களுக்காக மனம் திறந்தார்...
* உங்களைப்பற்றி..
தாய்மொழி தெலுங்கு என்றாலும் சென்னை தான் சொந்த ஊர். தமிழ் எனது உயிர். எம்.ஏ.,பொது நிர்வாகம் படித்துள்ளேன். பிஎச்.டி., செய்து வருகிறேன்.
* சினிமாவுக்கு எப்படி...
கல்லுாரியில் படித்த போதே மாடலிங் செய்தேன். விளம்பர படங்களிலும் நடித்தேன். 'தெறி' பட வசன கர்த்தா ரமணகிரிவாசன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானேன். 2014ல் பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவான 'தலைமுறைகள்' படத்தில் நாயகி. இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது 'மாஸ்' படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளேன். தொலைக்காட்சி தொடர்கள், விளம்பர படங்களில் நடிக்கிறேன்.
* சினிமாவில் கவர்ச்சி அவசியமா ?
கவர்ச்சி என்பது அவரவர் விருப்பம். ஒரு நடிகையின் உடல்வாகு, அவரது விருப்பத்தை பொறுத்து நடிக்கலாம். என்னைப் பொறுத்தவரை கமர்ஷியல் கேரக்டர்களில் நடிக்க மாட்டேன். நல்ல கேரக்டர் ரோல் செய்ய வேண்டும். நடிப்பை மட்டுமே நம்புகிறேன். கவர்ச்சியை ஒருபோதும் நம்புவதில்லை.
* பிடித்த நடிகர், நடிகை...
பிடித்த ஹீரோ தனுஷ். அவரது நடிப்பை மிகவும் ரசிப்பேன். நடிகைகளில் சிம்ரன் ரொம்ப பிடிக்கும். அவரால் கிளாமராகவும், எந்த நடிகர் என்றாலும் அவர்களுக்கு தகுந்த மாதிரியும் நடிக்கும் திறன் பெற்றவர். அடுத்து நயன்தாராவை பிடிக்கும்.
* பிடித்த உணவு...
பிரியாணி. அது எந்த வகை பிரியாணியாக இருந்தாலும் “செம கட்டு”தான். பிரியாணி ஓட்டல்களை தேடி அலைபவள் நான்.
* பிடித்த ஊர்...
சென்னை தான். இங்குள்ள வசதிகள் வேறு எங்கும் இல்லை.
* ஷூட்டிங் இல்லாத நாட்களில்..
இசை கேட்பேன். உடற்பயிற்சி செய்வேன். யோகாவிற்கு அதிக நேரம் ஒதுக்குவேன்.
* பிடித்த ஆடை...
சுரிதார். அதிகமாக டிசைனிங் வேலைப்பாடுகள் நிறைந்த துப்பட்டா அணிவது பிடிக்கும். பட்டுப்புடவை ரொம்ப பிடிக்கும். அதுவும் காஞ்சி பட்டு மிகவும் பிடிக்கும்.
* ஆண்கள் பற்றி...
ஒரு ஆண்மகன் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறாளோ இல்லையோ... ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் நிச்சயம் ஒரு ஆண் இருப்பான். அது தந்தையாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ, காதலனாகவோ கூட இருக்கலாம்.
* காதல் பற்றி...
காதலிப்பதில் தவறில்லை. அதில் நேர்மை இருக்க வேண்டும்.
* நடிக்க வராவிட்டால்..
ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பது ஆசை. அதற்காகத்தான் எம்.ஏ.,(பொது நிர்வாகம்) படித்தேன். நடிப்பு என்ற வட்டத்திற்குள் வேலைப்பளு அதிகரித்ததால் அந்த லட்சியத்தை அடைய முடியாதது வருத்தமளிக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE