'இரு வாரங்களுக்குள், அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, பொதுப்பணித் துறை சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ஆறு ஆண்டுகளாக, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, தென்பெண்ணை இல்லத்தில் வசித்து வந்தார். அவர் முதல்வர் பதவியை இழந்ததும், அரசு இல்லத்தை காலி செய்யும்படி, பொதுப்பணித் துறை சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
அவரும், போயஸ் கார்டன் பகுதியில் உள்ள, வீனஸ் காலனியில், வாடகைக்கு வீடு பிடித்து, இரு வாரங்களுக்கு முன், அங்கு குடியேறினார். எனினும், அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து, தென்பெண்ணை வீட்டிற்கு வந்தபடி உள்ளனர்.
'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடியும் வரை, அந்த வீட்டை, தொண்டர்களை சந்திக்க பயன்படுத்திக் கொள்வோம்' என, அவருடன் உள்ள முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்தனர். அதை ஏற்ற பன்னீர்செல்வம், அங்கு தொடர்ந்து தொண்டர்களை சந்தித்து வருகிறார். முக்கிய நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். இது, தினகரன் தரப்பினருக்கு, எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், நேற்று பொதுப்பணித் துறை சார்பில், 'இரு வாரங்களுக்குள், வீட்டை காலி செய்ய வேண்டும்' என, பன்னீர்செல்வத்திற்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -