புதுடில்லி : 'பசு மாடுகள் கடத்தப்பட்டு, கொல்லப்படுவதை தடுக்கும் வகையில், அவற்றுக்கு, 'ஆதார்' எண் போன்ற, அடையாள எண் வழங்க வேண்டும்' என, மத்திய அரசு அமைத்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
உ.பி., குஜராத் உட்பட பல மாநிலங்களில், சமீபத்தில், பசு மாடுகளை கடத்தி கொன்றதாக பலர் மீது தாக்குதல் நடந்தது; இதை தொடர்ந்து, பசு பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளை அளிப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சகம் கமிட்டி ஒன்றை அமைத்தது.
இந்நிலையில், 'நாள்தோறும் ஆயிரக்கணக்கான பசுக்கள், வங்கதேசத்திற்கு கடத்தி செல்லப்பட்டு, கொடூரமாக கொல்லப்படுகின்றன. இதை தடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறி, அகில பாரத பசு பாதுகாப்பு இயக்கம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய உள்துறை அமைச்சகம்
நியமித்த, கமிட்டியின் பரிந்துரைகள், மத்திய அரசின்சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அளிக்கப்பட்டன.
அந்த பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளதாவது:
பசுக்கள் கடத்தப்படுவதை தவிர்க்க, அதன் எண்ணிக்கை பற்றிய புள்ளி விபரங்கள் தேவை. ஆதார் எண்ணை போல, அதற்கென தனியான அடையாள எண்ணை உருவாக்கலாம்; அதில் மாடுகளின் வயது, பாலினம், வகை, இருக்கும் இடம், எடை, நிறம், வால், தனிப்பட்ட அடையாளம் போன்ற விபரங்களை பதிவு செய்யலாம். இதன் மூலம், பசு பாதுகாப்புடன், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கால்நடை உற்பத்தியை பெருக்கவும் முடியும்.
இது மட்டுமின்றி, கைவிடப்பட்ட பசு மாடுகளை பாதுகாப்பது மாநில அரசுகளின் கடமை; இதற்காக மாவட்டங்கள் தோறும், 500 பசு மாடுகளை பாதுகாக்கும் வகையில், கூடம் அமைக்கப்பட வேண்டும்.இவ்வாறு அந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.