வாஷிங்டன் : அமெரிக்காவில், குடியுரிமை அளிப்பதை உறுதி செய்யும், 'கிரீன் கார்டு' பெறுவதற்காக காத்திருக்கும், இந்திய தொழிலாளர்கள், தகுதி அடிப்படையிலான குடியேற்ற விதிகளை ஆதரித்து, தங்கள் குடும்பத்தினருடன், வெள்ளை மாளிகை முன், பேரணி நடத்தினர்.
'அமெரிக்காவில், வேலை வாய்ப்பில், அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, அதிபர், டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். திறன் படைத்த தொழிலாளர்கள், அமெரிக்காவில் வேலை செய்ய வழங்கப்படும், எச்-1பி உள்ளிட்ட விசாக்கள் வழங்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க, அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு, பல தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில், தகுதி அடிப்படையில் குடியேற்ற விதிகள் வகுக்க, டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவித்து, வாஷிங்டனில், வெள்ளை மாளிகை முன், இன்று(பிப்.,4) பேரணி நடந்தது. இதில், இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். இவர்கள், அமெரிக்க குடியுரிமை கோரி விண்ணப்பித்து, பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
பேரணியில், அமெரிக்காவின், புளோரிடா, நியூயார்க், மாசாசூசெட்ஸ் உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து, ஏராளமான இந்தியர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு நாட்டுக்கும் குடியேற்ற அனுமதி வழங்குவதில் உச்ச வரம்பு நிர்ணயிக்கும் முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என, பேரணியில் பங்கேற்றோர் வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE