புதுடில்லி : 'மருத்துவக் கல்விக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு உட்பட, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு, 'ஆதார்' எண்ணைக் கட்டாயப்படுத்தக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஆதார் தொடர்பான வழக்குகளை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரிக்கிறது. நேற்று, இந்த வழக்கின் விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞர், அரவிந்த் தாடர், புதிய மனுவைதாக்கல் செய்தார்.
அவர் வாதிட்டதாவது: குறிப்பிட்ட ஆறு திட்டங்களை தவிர, அரசின் நலத் திட்டங்களுக்கு, ஆதார் எண்ணைக் கட்டாயப்படுத்தக் கூடாது என, 2015 டிசம்பரில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தொடர்ந்து பல்வேறு சேவைகளுக்கு, ஆதார் கட்டாயப்படுத்தப்படுகிறது
.மருத்துவக் கல்விக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுத, ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் கட்டாயப்படுத்துகிறது. ஆதார் இல்லாத மாணவர்கள், தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால், ''நீட் தேர்வு எழுத, மாணவர்கள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என, எந்த உத்தரவையும்,சி.பி.எஸ்.இ.,க்கு, மத்திய அரசு பிறப்பிக்கவில்லை,'' என, குறிப்பிட்டார்.
இதையடுத்து, அமர்வு பிறப்பித்த உத்தரவு: மருத்துவக் கல்விக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு உட்பட, தேசிய அளவில் நடக்கும் எந்த நுழைவுத் தேர்வுக்கும், ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக் கூடாது. இதை, சி.பி.எஸ்.இ.,க்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். இந்த உத்தரவு, அதன் இணையதளத்தில் பதிவிட வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட பிற ஆவணங்களின் அடிப்படையில், மாணவர்கள், நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
'ஆதார்' தொடர்பான வழக்கின் விசாரணை, நேற்றும் தொடர்ந்தது. அப்போது, காங்., மூத்த தலைவர், ஜெய்ராம் ரமேஷ் சார்பில், காங்., மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான, சிதம்பரம் வாதிட்டதாவது: ஆதார் மசோதா, பார்லிமென்டில் கொண்டு வந்த போது, அதை, பண மசோதாவாக தாக்கல் செய்தனர். பண மசோதாவின் படி, ராஜ்யசபாவில் இந்த மசோதா மீது, எதிர்க்கட்சிகள் எந்த எதிர்ப்பு தெரிவித்தாலும், அதை ஏற்காமல், லோக்சபாவில் நிறைவேற்றினால் மட்டும் போதும். எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு, பண மசோதாவாக தாக்கல் செய்தனர். எதிர்க்கட்சிகள் கூறிய எதிர்ப்புகளை, மத்திய அரசு ஏற்கவில்லை. இந்த மசோதாவில், பல ஆபத்துகள் உள்ளன என்ற எதிர்க்கட்சிகளின் எச்சரிக்கை எடுத்துக் கொள்ளப்படவில்லை. இவ்வாறு அவர் வாதிட்டார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (6)
Reply
Reply
Reply