ஆதரவற்ற பிரேதங்களுக்கு ஆதரவு தரும் ஏபிகேடி அறக்கட்டளை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி
சென்னை மூலக்கொத்தளம் சுடுகாட்டின் மையத்தில் தோண்டப்பட்டுள்ள பெரிய குழியின் அருகே மயான உதவியாளர்கள் காத்திருக்கின்றனர்
அவர்கள் காத்திருப்பை பூர்த்தி செய்யும் வகையில் அந்த அரசு ஆஸ்பத்திரியின் அமரர் வாகனம் உள்நுழைகிறது.
வாகனத்திற்குள்
இருந்து ஒன்று,இரண்டு,மூன்று என்று மொத்தம் 11 பிரேதங்களை வரிசையாக
இறக்குகின்றனர்.இறக்கிய பிரேதங்களை குழியருகே கொண்டு செல்கின்றனர்.
ஆண்களும்,பெண்களுமாக
அங்கே சுமார் ஐம்பது பேர் திரண்டு நிற்கின்றனர்.இவர்கள் யாருமே
இறக்கிவைக்கப்பட்ட பிரேதங்களுக்கு சொந்தமில்லதாவர்கள், சென்னை அரசு
ஆஸ்பத்திரியில் நீண்ட நாள் கேட்பாரற்று வைக்கப்பட்டிருந்த
பிரேதங்களைத்தான் இவர்கள் அடக்கம் செய்ய வந்திருக்கின்றனர்.
இறுதி
மரியாதைக்கான வேலைகளை மயான உதவியாளர்களுக்கு நிகராக அனைவரும்
இழுத்துப்போட்டுக் கொண்டு செய்கின்றனர் எப்படியும் அரைமணி நேரமாகும்
அதற்குள் இந்த நல்ல காரியம் பிறந்த கதையைப் பார்த்துவிடுவோம்.
சென்னை
பாலவாக்கத்தைச் சேர்ந்வர் ஸ்ரீதர் காஞ்சி பெரியவர் மீது மிகவும் பக்தி
கொண்டவர்.அவரது உத்திரவின்படி ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்யும் பணியினை
மேற்கொண்டார்.
ஆரம்பத்தில் முதியோர் இல்லங்களில் இருந்து
இறந்து போகக்கூடியவர்களின் பிணங்களை மட்டும்தான் அடக்கம் செய்துகொண்டு
இருந்தார். அப்போது, விபத்துகளில் சிக்கி இறந்து போன அடையாளம் தெரியாத
பிணங்களும், பிச்சைக்காரர் உள்ளீட்டவரின் பிணங்களும் அரசு ஆஸ்பத்திரியின்
பிணவறைகளில் கேட்பாரற்று நீண்ட நாள் இருப்பதை அறிந்தார்.
இந்த
ஆத்மாக்கள் இருக்கும் போதுதான் நிம்மதியாக இருக்கவில்லை, இறக்கும் போதும்
நிம்மதியாக இறக்கவில்லை. குறைந்தபட்சம் இறந்தபிறகாவது நாம் ஒரு மரியாதை
கொடுத்து அடக்கம் செய்வோமே என்று எண்ணினார்.
ஆதரவற்ற
பிரேதங்களுக்கு கைங்கர்யம் செய்யும்(ஏபிகேடி) அறக்கட்டளையை முறைப்படி கடந்த
2001ம் ஆண்டு பதிவு செய்து அன்று முதல் இன்று வரை இதுவரை சுமார் 2050
பிரேதங்களை அடக்கம் செய்துள்ளார்.
பிணவறையில் பிரேதங்கள்
ஒரு அளவிற்கு மேல் சேர்ந்ததும் இவர்களுக்கு தகவல் வந்துவிடும் பின்
முறைப்படி அனுமதி பெற்று வாகனங்களில் பிரேதங்களை கொண்டு சென்று அடக்கம்
செய்துவிடுவர்.
மாதத்திற்கு ஒரு முறை இந்த நிகழ்வு
நடக்கும் சில மாதங்களில் பிரேதங்கள் அதிகமாகிவிட்டால் இரு முறை கூட
நடக்கும். பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைதான் நடைபெறும் இரண்டு நாள்
முன்னதாகவே மொபைல் ஆப் மூலம் அறக்கட்டளையினருக்கு தகவல் சென்றுவிடும்
,ஆஸ்பத்திரியில் ஒன்று கூடி பிரேதங்களை வாங்கிக்கொண்டு ஊர்வலமாக
மயானத்திற்கு கொண்டு சென்று புதைப்பர்.
லயன் டி.கே.சுவாமி
இந்த அறக்கட்டளையினருக்கு பெரும் துணையாக இருந்து பிரேதங்கள் ஒவ்வொரு
இடத்திலும் எவ்வித தடையையும் சந்திக்காதபடி செல்வதற்கும், அந்த
பிரேதங்களுக்கு தேவையான மாலை மரியாதை உள்ளீட்ட பொருள்கள்
கிடைப்பதற்கும் உதவியாக இருக்கிறார்.
இந்த பிரேதங்களை
அடக்கம் செய்யும் மயான உதவியாளர்களுக்கு வேட்டி சட்டையுடன் வெகுமானம் தந்து
மரியாதை செய்யப்படுகிறது.ஒவ்வொரு பிரேதத்திற்கும் சுமார் இரண்டாயிரம்
ரூபாய் வரை செலவாகிறது ஆனால் யாரிடமும் பணம் கேட்பது இல்லை. இன்னும்
எத்தனை பிரேதங்கள் ஆதரவற்று வந்தாலும் அவைகளை இல்லையில்லை அவர்களை
நல்லடக்கம் செய்ய எங்களுக்கு தேவையான 'சக்தியை' இறைவன் கொடுத்துள்ளார்
என்று சொல்லி முடித்தார் ஸ்ரீதர்.
இதோ இறுதி மரியாதை
துவங்கிறது,எங்கும் ஊதுபத்தியும் சாம்பிராணியும் கொளுத்தப்பட்டு மயானம்
புத்துயிர் பெறுகிறது.பிரேதங்களின் மீது கங்கா தீர்த்தம் தெளிக்கப்பட்டு,
எள் துாவப்பட்டு பின் குழிக்குள் இறக்கப்படுகிறது. மூடப்பட்ட குழி மீது
பலவிதமான மலர்கள் துவப்படுகிறது. ஒருவர் உரத்த குரலில் பட்டினத்தார்
பாடலை பாடுகிறார், பின் பலரும் சேர்ந்து சிவபுராணத்தை பாட அந்த இடம்
இன்னும் ஏகாந்தம் பெறுகிறது.
அருகில் உள்ள மரங்களின்
மெல்லிய அசைவுகளிலும், இலை தளைகளின் சலசலப்புகளிலும், காற்றின் ஒசையிலும்,
சுற்றி சுற்றி வந்து இசைபாடும் பறவைகளின் சங்கீத சப்தத்திலும் இறந்து போன
ஆத்மாக்களின் நன்றியும் சந்தோஷமும் எதிரொலிக்கிறது.
இந்த அறக்கட்டளையின் பணி பற்றி மேலும் அறிந்து கொள்ள ஸ்ரீதர் மறறும் அறங்காவலர் கே.ஜெயராமனை தொடர்புகொள்ளவும் எண்கள்:9840744400.,9840045776.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE