புனே: இமயமலையில் உள்ள, பனிச் சிகரமான சியாச்சினில் பணியாற்றும், இந்திய ராணுவ வீரர்களுக்காக, புனேயைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை, தன் நகைகளை விற்று, பண உதவி செய்துள்ளது, பாராட்டை பெற்றுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்தவர்கள், சுமீதா - யோகேஷ் சித்தாடே தம்பதி. இதில், யோகேஷ், இந்திய விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சுமீதா, ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்கு பின், இந்திய ராணுவ வீரர்களின் வீரம், தியாகம் மற்றும் பெருமைகள் குறித்து, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடையே, சுமீதா உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், இமய மலையில், இந்திய - பாக்., எல்லையில், பனிச் சிகரமான சியாச்சினில், கடும் குளிரில் பணியாற்றும் வீரர்களுக்கு உதவி செய்ய, அவர் விரும்பினார். கடல் மட்டத்தில் இருந்து, 19 ஆயிரம் அடி உயரத்தில் இருப்பதால், அங்கு எப்போதுமே, பிராணவாயு அளவு குறைவாக இருக்கும். இதனால், ராணுவ வீரர்களுக்கு அடிக்கடி மூச்சு திணறல் பிரச்னை ஏற்படும். வீரர்களின் தேவைக்காக, அங்கு, ஒரு பிராணவாயு நிலையம் உள்ளது.
வீரர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், மேலும், ஒரு பிராணவாயு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதை அறிந்த சுமீதா, தன்னிடம் இருந்த தங்க நகைகளை, விற்று, அதில் கிடைத்த, 1.25 லட்சம் ரூபாயை, பிராணவாயு நிலையம் அமைக்கும் பணிக்கு நன்கொடையாக வழங்கினார்.