சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலின் இன்று தலைமை செயலாளரை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி, ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. போராட்டக்காரர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண முயற்சி செய்திருக்க வேண்டும். மேலிடத்து உத்தரவு வராமல் இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருக்க வாய்ப்பில்லை. குருவியை சுடுவது போன்று நடத்திய போலீசாரின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இந்த அரசு தலா ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கிட வேண்டும்.
முன்னதாக நாளை கர்நாடகா முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவிற்கு செல்ல ஸ்டாலின் திட்டமிட்டிருந்த நிலையில் அதனை ரத்து செய்துவிட்டு, நாளை தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை பார்வையிட உள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE