கவுகாத்தி : "இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை முடிவுகளில் அமெரிக்காவுக்கு அதிமுக்கியத்துவம் தரப்படுகிறது என, சமீபத்தில் கசிந்த தகவல் மூலம், பிரதமரின் நேர்மைக்கு மீண்டும் களங்கம் ஏற்பட்டுள்ளது' என, பா.ஜ., தெரிவித்துள்ளது.இது குறித்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய வெளியுறவுக் கொள்கை முடிவுகளைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் தரப்படுகிறது; அதுபோல், வெளிநாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு இருப்பதாக சமீபத்தில் தகவல் கசிந்துள்ளது. இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும். "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை முறைகேடு முதல், ஊழல் புகாரில் சிக்கிய ஒருவரை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமனம் செய்தது வரை நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது பிரதமர் மன்மோகன் நேர்மையானவரா என்ற கேள்வி எழுகிறது. இந்த விவகாரத்தில் அவர் தொடர்ந்து மவுனமாக இருந்து வருவது ஏன்? பிரதமர் அலுவலகத்தில் எந்த அதிகாரங்களும் இல்லாமல் அவர் இருக்கிறார்.இவ்வாறு பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE