ராணுவத்தினர் இரவு நேரத்தில் எதிரிகளை கண்காணிக்க, 'நைட் விஷன்' கருவியை பயன்படுத்துவர்.
ஆனால், எதிரிகளிடமும் அதே கருவி இருந்தால், எப்படி தப்பிப்பது? அதற்காகத்தான் இப்போது ஆய்வுகள் நடக்கின்றன.
மனித உடலிலிருந்து வெளிப்படும் வெப்பத்தை வைத்துத்தான், இரவு பார்வைக் கருவிகளால் மனித நடமாட்டத்தை காட்ட முடிகிறது.
அந்த வெப்பத்தை மறைத்துவிட்டால், இரவு பார்வைக் கருவிகள் மனித அசைவுகளை படம்பிடிக்க இயலாது. துருக்கியைச் சேர்ந்த பில்கென்ட் பல்கலைக்கழகமும், இஸ்மீர் தொழில்நுட்ப நிலையமும் இணைந்து, ஒரு உடையை வடிவமைத்துள்ளனர்.
இதை அணிந்து கொண்டால், உடலின் வெப்பம் அகச் சிவப்புக் கதிர்களாக வெளிப்படுவதை தடுத்துவிடும். இரவுப் பார்வைக் கருவிக்கு, அகச் சிவப்புக் கதிர்கள் தென்படாவிட்டால், மனித உருவமும் தெரியாது.
துருக்கி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய உடை மூன்று அடுக்குகளைக் கொண்டது. கிராபீன் படலம், அயனி திரவத்தைக் கொண்ட படலம் மற்றும் தங்க முலாம் பூசிய நைலான் படலம்.
இந்த மூன்றும் ஒட்டப்பட்டிருக்க, அயனி திரவப் படலத்தின் மீது லேசாக மின்சாரம் பாய்ச்சியதும், கிராபீன் படலமும் தங்கப்படலமும், அணிந்திருப்பவரின் உடலிலிருந்து அகச் சிவப்புக் கதிர்கள் கசிவதை தடுத்துவிடுகின்றன.
ராணுவம் தவிர, விண்வெளியில் சூரியனின் வெப்பத்திலிருந்து செயற்கைக் கோள்களையும், விண்வெளி நிலையங்களையும் காப்பாற்றவும் இத் தொழில்நுட்பம் பயன்படும்.