மகன் சிறந்த பொறியாளராக வேண்டும் என்பது அந்த ஆசிரிய பெற்றோரது ஆசை. ஆனால் சிறு வயதிலிருந்து நடிப்பு மீதான ஆர்வத்தால் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த கையுடன் சென்னை அடையாறு பிலிம் இன்ஸ்டிடியூட்டில் போய் சேர்ந்து விட்டார். பிலிம் இன்ஸ்டிடியூட்டில் தங்கமெடல் வாங்கி நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். இன்ஸ்டிடியூட்டிலிருந்து வெளியே வந்த கையுடன் கதாநாயகனாக அறிமுகமான 'தம்பி வருவான்' கைகொடுக்காமல் போனாலும் 'வல்லரசு', 'அரசாட்சி', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'கில்லி' போன்ற படங்கள் இவருக்கு சினிமாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தை கொடுத்திருக்கிறது. சிறிய இடைவெளிக்கு பிறகு 'பராரி' மூலம் மீண்டும் கதாநாயகனாக உருவெடுத்திருக்கிறார். அவர் தான் நடிகர் முகில்.
அவருடன் பேசியதிலிருந்து...
சொந்த ஊர் மதுரை என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்தளவுக்கு அப்பா முத்தழகர்சாமி, அம்மா ரங்கநாயகி இருவரும் ஆசிரியர்களாக இருந்ததால் அவர்கள் பணிபுரியும் இடங்களில் குடிபெயர்ந்து விடுவோம். பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சிறந்த மாணவர் என பெயர் பெற்றதுடன் நடிப்பில் தங்கப்பதக்கமும் கிடைத்தது.
படித்து முடித்த கையுடன் 'தம்பி வருவான்' படத்தில் ஹீரோ வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்தளவு வெற்றி பெறவில்லை. ஆனால் என் நடிப்பை கவனித்த இயக்குனர் மகாராஜன் அவர் விஜயகாந்த்தை வைத்து இயக்கிய வல்லரசு படத்தில் வாய்ப்பு தந்தார். 'அரசாட்சி' படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களை தந்தார். துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜய்க்கு நண்பனாக நடித்தேன். பிறகு கில்லியில் திரிஷா அண்ணனாக நடித்தேன்.கில்லி படம் தெலுங்கில் வெளியான உக்கடு என்ற படத்தின் ரீமேக். அதில் நாயகி பூமிகா அண்ணனாக நடித்தவர் அச்சுத்காரு. சிறந்த நடிகரான அவர் படம் வெளியான சில நாட்களில் இறந்தார். படத்திலும் அண்ணன் கதாபாத்திரம் இறப்பதாக இருக்கும். இதனால் விசாகபட்டினத்தில் நடந்த படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் அச்சுத்காரு பாத்திரத்தில் நான் நடிப்பதை கேட்டு தெரிந்து கொண்ட அவரது ரசிகர்கள் எனக்கு தினமும் திருஷ்டி சுற்றி போட்டதை மறக்க இயலாது.
சரியான கதாபாத்திரங்களுக்காக இடைவெளி விட்ட நிலையில் நண்பர்கள் அளித்த ஊக்கத்தால் ஸ்கைகிமீடியா என்ற பெயரில் சினிமா நிறுவனம் மூலம் பராரி படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்து வருகிறேன். பராரி என்றால் சொந்த ஊரில் வாழ முடியாதவன் என்று பொருள். என்னை பொறுத்துவரையில் நான் சினிமா பராரி.
பெயரிடப்படாத மேலும் இரு சினிமாக்களிலும் ஹீரோ வாய்ப்பு கிட்டியுள்ளது. சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பேன் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. பெரிய ஆளாகி தான் சேவை செய்ய வேண்டும் என்பதில்லை. சினிமாக்களில் நடித்து கொண்டிருந்தாலும் கூட, மதுரையில் முதியோர் இல்லம், போதை மறுவாழ்வு மையம் மன திருப்திக்காக நடத்தி வருகிறேன் என்றார்.இவரை வாழ்த்த 89391 66067
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE