சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வெளிநோயாளிகள் பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் உடனடி சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
அரசு டாக்டர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும், 13 வருடங்களில் தகுதிக்கேற்ற ஊதியம், மற்றும் பயணப் படிகளை வழங்க கோரியும் வெளி நோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து டாக்டர்கள் பணிக்கு வராமல் இருந்தனர்.
தற்போது காலநிலை மாற்றத்தால் காய்ச்சல், மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பரிதவித்தனர். இதனையடுத்து நோயாளிகள் மருந்தாளுர்களிடம் மாத்திரைகளை மட்டும் வாங்கி சென்றனர்.
டாக்டர்களின் போராட்டத்தால் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். மானாமதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வெகுநேரம் காத்திருந்தும் டாக்டர்கள் வராததால் நோயாளிகள் வேதனையுடன் திரும்பினர். கரூரில் டாக்டர்கள் மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE