புதுடில்லி : ஒரு வழியாக, ராஜஸ்தான் முதல்வர் யார் என்பதை, ராகுல் அறிவித்துவிட்டார். அசோக் கெலாட் முதல்வரா அல்லது சச்சின் பைலட் முதல்வரா என்ற சண்டை, சினிமா கிளைமேக்ஸ் போல நீடித்து, 67 வயதான கெலாட் முதல்வரானார். 41 வயதான சச்சின் பைலட், நம்ம ஊர் பன்னீர் போல் துணை முதல்வராகி விட்டார்.ஆனால், அங்கு நிலைமை சரியில்லை என்கின்றனர், காங்கிரசார். 'சச்சின் பைலட்டின் அதிருப்தி நீடிக்கிறது; கடும் கோபத்தில் அவர் உள்ளார்' என்கின்றனர், அவருடைய ஆதரவாளர்கள்.'பைலட்டின் கடின உழைப்பால் தான் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது; ஆனால், அவரை முதல்வராக்கவில்லை' என அவரது ஆதரவாளர்கள் கொந்தளிக்கின்றனர். இளைஞர்கள் முக்கிய பதவிகளுக்கு வர வேண்டும் என்று சொல்லும் ராகுல், ஏன் பைலட்டை முதல்வராக்கவில்லை? ராகுலுக்கு, சச்சின் பைலட் தான் பிடிக்கும். ஆனால், அசோக் கெலாட், சோனியாவுடன் நெருக்கம்; அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.எனவே, சோனியா தான், 'கெலாட் முதல்வராகட்டும்; பைலட், துணை முதல்வராக பதவியேற்கட்டும்' என சொல்லிவிட்டாராம்.முதல்வரும், துணை முதல்வரும் மட்டுமே பதவி ஏற்றனர். இப்போது, அமைச்சர்கள் லிஸ்ட் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதிலும், கெலாட்டிற்கும், பைலட்டிற்கும் பிரச்னை. தான் முதல்வராக இருந்த போது யார் அமைச்சர்களாக இருந்தனரோ அவர்களுக்கு மீண்டும் பதவி என்கிறார், கெலாட்.'அவர்கள் வயதானவர்கள்; இளைஞர்களுக்கு பதவி கொடுங்கள்' என்கிறார் பைலட். காங்கிரஸ் என்றாலே, கோஷ்டி பிரச்னை தான்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE