புதுடில்லி : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளதால், மீண்டும் ஆட்சி அமைக்கும் பணிகளை தேசிய ஜனநாயக கூட்டணி துவக்கி உள்ளது.

கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், அமைச்சரவையில் பங்கேற்றவர்களுக்கு பா.ஜ., நேற்று (மே 21) விருந்தளித்தது. இதில் 36 கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். விருந்தில் பங்கேற்காத 3 கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், ஆதரவு கடிதம் அளித்துள்ளதாகவும் விருந்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத்தில் பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு, தேசியவாதம் மற்றும் வளர்ச்சி ஆகிய மூன்றையும் அடிப்படையாக கொண்டு புதிய அரசு அமைக்கப்பட உள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அடுத்த 5 ஆண்டுகளில் மக்களின் பிற தேவைகள், வளர்ச்சி திட்டங்களை வேகப்படுத்துவதில் கவனம் செலுத்த உள்ளோம் எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இது தவிர புதிய அமைச்சரவை குறித்து அமித்ஷாவும், பிரதமர் மோடி தீவிரமாக ஆலோசித்து வருவதாக பா.ஜ., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை(மே 23) ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, ஜனாதிபதியை சந்திப்பது, பதவியேற்கும் தேதி உள்ளிட்ட புதிய அரசமைப்பதற்கான நடைமுறைகளை துவக்கவும் பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE