கோல்கத்தா : அதிருப்தியில் இருக்கும் மம்தாவின் திரிணாமுல் காங்., எம்எல்ஏ.,க்கள் 143 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளதாக பா.ஜ.,வின் முகுல் ராய் தெரிவித்துள்ளார்.
மம்தாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 14 மாதங்களுக்கு முன் திரிணாமுல் காங்., ல் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தவர் முகுல் ராய். லோக்சபா தேர்தலில் மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 42 இடங்களில் 18 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது குறித்து முகுல் ராய் அளித்த பேட்டியில், மம்தா என்னை துரோகி என்கிறார். காங்.,கில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்த அவரையும் நான் துரோகி எனலாம். ஆனால் நான் அப்படி சொல்ல மாட்டேன்.
2021ல் மேற்குவங்க சட்டசபை தேர்தல் நடக்குமா அல்லது அதற்கு முன்னதாகவே தேர்தல் வருமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். திரிணாமுல் காங்.,ல் இருந்து எத்தனை பேர் என்னை தொடர்பு கொண்டார்கள் என்பதை வெளிப்படையாக கூற முடியாது.
ஆனால், லோக்சபா தேர்தலால் 143 சட்டசபை உறுப்பினர்களை திரிணாமுல் இழந்துள்ளது. தோற்கும் கட்சியில் இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள். தோல்வி அடையும் என உறுதியாக தெரிந்தும் அக்கட்சியில் போட்டியிட யாரும் முன்வர மாட்டார்கள்.
மேற்குவங்கத்தில் ஜனநாயகம் திரும்ப கொண்டு வரப்பட வேண்டும். அங்கு ஜனநாயகம் திரும்புவதற்கான முதல்படி தான் இது. மேற்குவங்கத்தில் சில வளர்ச்சிகளை ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும்.
மம்தா போலி மதசார்பற்ற நிலையை கையாண்டு வருகிறார். மேற்குவங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களில் யாருக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதை பிரதமர் தான் முடிவு செய்ய வேண்டும். பா.ஜ., தேசிய கட்சி. அது திரிணாமுல் காங்., ஐ போல் கொள்கைகளோ, சித்தாந்தங்களோ இல்லாத கட்சி அல்ல என்றார்.