புதுடில்லி : பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 16 வது லோக்சபாவை போலவே, இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காது. ஆளும் பா.ஜ., இதை முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

2வது முறையாக...
கடந்த 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி இழந்தது.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலை விட தற்போது 8 இடங்கள் மட்டுமே கூடுதலாக கிடைத்துள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து 2-வது தடவையாக பறிபோய் உள்ளது.
ராகுல் முயற்சி வீண் :
உறுப்பினர்களில் 10 சதவீதம் இடங்கள் அதாவது 55 இடங்களைப் பெற்றால்தான் ஒரு கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். காங்கிரஸ் கட்சிக்கு அந்த இடத்தைப் பெற தற்போது 3 எம்.பி.க்கள் குறைவாக உள்ளனர். இது ராகுலை கடும் விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ராகுல் ஓரிரு எம்.பி.க்களை வைத்திருக்கும் சிறிய கட்சிகளை காங்கிரசுடன் இணைத்து எதிர்க்கட்சி தலைவர் ஆகி விடலாம் என்று ஓசையின்றி முயற்சி செய்தார். ஆனால் எந்த கட்சியும் இணைய மறுத்து விட்டன.

மோடியின் பேச்சு ;
இதனால் லோக்சபா காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்கவும் ராகுல் தயங்குகிறார். இந்த நிலையில் நேற்று பேசிய பிரதமர் மோடி, “பாராளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு மரியாதை உண்டு. எனவே எண்ணிக்கை பற்றி கவலைப்படாமல் எதிர்க்கட்சிகள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்” என்றார்.
பிரதமர் மோடி பேச்சால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படலாம் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இதற்கான அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
சலுகை இல்லை :
ஆனால் பா.ஜ., மூத்த தலைவர்கள் இந்த விஷயத்தில் அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பட்ட முறையில் சலுகை காட்டக்கூடாது என்று முடிவு எடுத்துள்ளனர். அதன்படி காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை மத்திய அரசு வழங்காது என்று பா.ஜ., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE