கீழக்கரை: கீழக்கரை அருகே தனியார் தென்னந்தோப்பில் சட்டவிரோதமாக சூதாட்டகிளப் நடத்திய கீழக்கரை அ.தி.மு.க.,செயலாளர் உட்பட 13 பேரை ராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர். கீழக்கரை பகுதியில் பல்வேறு கிராமங்களில் தனியார் தோப்புகளில் சூதாட்ட கிளப் நடந்து வருவதாக ராமநாதபுரம் எஸ்.பி., அனில்குமார் கிரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கீழக்கரை அருகே செங்கல் நீரோடை கிராமத்தில் கீழக்கரை காசீம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் ராமநாதபுரம் ஏ.எஸ்.பி.,சிபி சக்கரவர்த்தி தலைமையில் தனிப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கீழக்கரை நகர் அ.தி.மு.க., செயலாளர் ராஜேந்திரன்,கீழக்கரையை சேர்ந்த அமீர்தீன்(65), லோகநாதன்(52), முகம்மது மீரா சாகிபு(42),சிராஜ்தீன்(45),விஜயன்(59),சிவன்(29), கணேசன்(40), அழகர்சாமி(35), ஜகுபர் அலி(40),பாலமுருகன்(41), ஜாகிர் உசேன்(44) ராமநாதபுரம் தண்டபாணி(43)ஆகிய 13 பேரையும் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து மாருதி ஆம்னி கார்,இரு சக்கர வாகனங்கள் மூன்று,60 ஆயிரத்து 725 ரூபாய்,எட்டு பவுன் தங்க நகை,மற்றும் சூதாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட பர்னிச்சர்கள்,சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE