ஹிரோஷிமா: எப்.ஐ.எச்., ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் தொடரின் பைனலில் அசத்திய இந்திய பெண்கள் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது.

ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.எச்.,) சார்பில் பெண்களுக்கான சீரிஸ் பைனல்ஸ் தொடர் நடந்தது. இதன் பைனலில், உலகின் 'நம்பர்-9' இந்திய அணி, 14வது இடத்தில் உள்ள ஜப்பான் அணியை சந்தித்தது.
ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கேப்டன் ராணி ராம்பால் முதல் கோல் அடித்தார். இதற்கு, 11வது நிமிடத்தில் ஜப்பானின் கனான் மோரி, ஒரு 'பீல்டு' கோலடித்து பதிலடி தந்தார். முதல் பாதி முடிவில், போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.

பின், 45வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கோலடித்த இந்தியாவின் குர்ஜித் கவுர், 60வது நிமிடத்தில் 'பெனால்டி கார்னர்' மூலம் மீண்டும் ஒரு கோலடித்தார்.ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி, கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு, பெண்கள் ஹாக்கி பைனலில் ஜப்பானிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
இவ்விரு அணிகள், வரும் 2020ல் ஜப்பானில் நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் விளையாட தகுதி பெற்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE