வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு அகதியாக செல்ல ஆற்றில் நீந்திய போது தந்தையும், மகளும் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். தந்தையும், அவரது சட்டைக்குள் உடல்புதைத்து, கழுத்தை பற்றியபடி குழந்தையும் கரை ஒதுங்கிய புகைப்படம், உலகம் முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் வைரலாக பரவி வருகிறது.
பாலம் மூடல்
எல் சால்வடார் நாட்டை சேர்ந்தவர் மார்ட்டின்ஸ். இவரது மனைவி டானியா வனீசா அவலோஸ். இவர்களுக்கு வலேரியா என்ற 2 வயது நிரம்பாத மகள் உள்ளார். அவர்கள் 3 பேரும் கடந்த வாரம் பிழைப்பு தேடி அமெரிக்காவில் தஞ்சம் அடைய முடிவு செய்தனர். இதற்காக ஆயிரம் மைல் தூரம் பயணம் செய்த அவர்கள், அமெரிக்க எல்லையை ஒட்டியுள்ள மெக்சிகோவின் மடமோரஸ் நகருக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 23) வந்தனர். அங்கு, சர்வதேச எல்லையில் உள்ள பாலம் மூடப்பட்டிருந்தது. மறுநாள் தான் அதன் வழியே செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீற்றம்
அங்கு காத்திருக்க விரும்பாத அவர்கள், அங்குள்ள ரியோ கிராண்டே ஆற்றை கடந்தால், அமெரிக்காவிற்கு எளிதாக சென்றுவிடலாம் என கருதியுள்ளனர். இதனையடுத்து மார்ட்டின்ஸ், மகளை, தனது சட்டைக்குள் நுழைத்து சுமந்தபடி நீச்சலடித்து சென்றுள்ளார். மறுகரையில் உள்ள டெக்சாஸ் பிரவுன்வில்லி நகரை தொட முடியாமல், ஆற்றின் சீற்றத்தில் சிக்கினார். இதனை பார்த்த அவரது மனைவி அவோலியா மெக்சிகோ கரைக்கு திரும்பிவிட்டார்.

அதிர்வலைகள்
மார்ட்டின்சும், அவரது சட்டைக்குள் உடல் புதைந்தபடி மகள் வலேரியாவும் இறந்து சடலமாக கரை ஒதுங்கினர். இந்த புகைப்படம் நேற்று(ஜூன் 26) மெக்சிகோ நாளிதழில் வெளியானது. பின்னர் சர்வதேச அளவில் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விமர்சனம்
2015 ல் சிரியாவில் இருந்து சென்ற போது, படகு கவிழ்ந்த விபத்தில், 3 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்து கரை ஒதுங்கிய படம் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோன்று, இந்த படமும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, உலகம் முழுவதும் பலர், எல்லை விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.