கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் பெய்த சாரலை பயன்படுத்தி விவசாயிகள் வயல்களை உழுது தயார் நிலையில் வைத்துள்ளனர். ஆனால் தொடர் மழை பெய்தால்தான் பெரியாறு அணையில் இருந்து முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் சூழல் உள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வந்தது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இதில் கடந்த சில ஆண்டுகளாக சிக்கல் எழுந்து வரு கிறது. தென்மேற்கு பருவமழை ஏமாற்றுவதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயராமல் போகிறது. இதனால் முதல் போக சாகுபடி கைவிடும் அவலம் ஏற்படுகிறது.
சமீபத்தில் பெய்த மழையால் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்தது. ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை நின்று விட்டது. அணையிலும் நீர்மட்டம் உயரவில்லை. 'போர்வெல்' தண்ணீரை பயன்படுத்தி சில இடங்களில் முதல் போக சாகுபடிக்கு நாற்றங்கால் வளர்த்துள்ளனர். மோட்டார் பம்ப் செட் இறவை பாசனத்தில் நெல் சாகுபடிக்கு சிலர் தயாராகி வருகின்றனர். எனினும் பெரும்பாலான விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதற்காக வயலை உழுது சீர் செய்து வைத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE