ராமேஸ்வரம்:மண்டபம் அருகே சீனியப்பா தர்காவில் கடல் அரிப்பால் தார் சாலை சேதமடைந்து கிராமத்திற்குள் கடல்நீர் புகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.மண்டபம் அருகே சீனியப்பா தர்கா கிராமத்தில் 800க்கு மேலான மீனவர்கள் வசிக்கின்றனர்.
கிராமத்தில் இருந்து சுமார் 150 மீட்டரில் கடற்கரை உள்ளதால், 100க்கு மேற்பட்ட நாட்டுப்படகில் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் மீனவரகள், படகுகளை கரையில் நிறுத்துவர். தென் மேற்கு சூறாவளி காற்றினால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு பத்து ஆண்டுகளில் இக்கிராமத்தில் 100 மீட்டர் வரை மண் அரிப்பு ஏற்பட்டதால் மூன்று முறை பிரதான தார் சாலை ராட்சத அலைக்கு இரையாகியது.மேலும் கடலோரத்தில் நிறுத்தும் படகுகள் அடிக்கடி சேதம் அடைவதால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கடல் அரிப்பில் இருந்து கிராமத்தை பாதுகாக்க தமிழக அரசு 14 கோடி ரூபாயில் தடுப்பு சுவர் (கோடியாக்கரை சேர்த்து) அமைக்க உத்தரவிட்டும் இது வரை பணி துவங்காமல் கிடப்பில் உள்ளது.
இதனால் வரும் காலத்தில் கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்து வீடுகள் கடலுக்குள் செல்லும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து சீனியப்பா தர்கா ஜமாத் தலைவர் எஸ். ஹபீப் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் சீசனில் வீசும் ராட்சத அலையில் இக்கிராமம் சிக்கி கடல் அரிப்பால் பீதியடைகிறது. இதனை தடுக்க கடலோரத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை துரிதப்படுத்த,அதற்கான நிதியை விரைவில் ஒதுக்கமுதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE