புதுடில்லி: மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்., கட்சியை சேர்ந்தவரும், கோல்கட்டாவின் முன்னாள் மேயருமான சோவன் சாட்டர்ஜி இன்று(ஆக.,14) பா.ஜ.,வில் இணைந்தார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி செய்கிறது. இந்த அமைச்சரவையில் மம்தாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் சோவன் சாட்டர்ஜி. கட்சி தலைமையுடன் சாட்டர்ஜிக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் கடந்த ஆண்டு, தான் வகித்த மேயர் பதவியை ராஜினாமா செய்தார். சாட்டர்ஜியின் இந்த முடிவு கட்சி மேலிடத்திற்கு சற்று அதிர்ச்சியை தந்தது. திரிணாமுல் காங்கிரஸில் அவரை மீண்டும் இணைக்க பல்வேறு கட்ட முயற்சிகள் நடந்த நிலையில் சோவன் சாட்டர்ஜி அதற்கு பிடிகொடுக்கவில்லை எனவும் கூறப்பட்டது.
மேற்கு வங்கத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், ஆளும் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்., மிகப்பெரிய சரிவை சந்தித்தது. யாரும் எதிர்பாராத வகையில் பா.ஜ., அதிக இடங்களைப் பிடித்தது. இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உள்பட பல்வேறு நிர்வாகிகள் பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் முகுல்ராய் முன்னிலையில், சாட்டர்ஜி பா.ஜ.,வில் இன்று இணைந்தார். லோக்சபா தேர்தலுக்கு பிறகு திரிணாமுல் காங்., கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் இணைந்துள்ளனர். தற்போது சோவன் சாட்டர்ஜியும் பா.ஜ.,வில் இணைந்தது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE