ஆக்ரா : திருமணமான ஒரு மணி நேரத்தில் மனைவியை மூன்று முறை "தலாக்" சொல்லி விவாகரத்து செய்துள்ளார் ஒருவர்.

ராஜஸ்தானின் தோல்புர் மாவட்டத்தை சேர்ந்தவர் நதீம் என்ற பப்பன் (27). இவர் ஷூ ஷோரூம் ஒன்றில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஆக்ராவின் ஹரிபர்வத் பகுதியை சேர்ந்த ரூபி (26) என்ற பெண்ணிற்கும் ஆக.,15 அன்று இரவு திருமணம் நடைபெற்றது. ரூபி, பல் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார். 7 பேருடன் பிறந்த ரூபி, வீட்டில் 3 வது பிள்ளை.

திருமணத்தின் போது ரூபியின் வீட்டாரிடம் வரதட்ணையாக கார் வேண்டும் என நதீம் கேட்டுள்ளார். கார் தராததால், திருமணம் முடிந்த ஒரு மணி நேரத்தில், மவுலவி முன்னிலையில் மூன்று முறை "தலாக்" கூறி மனைவியை விவாகரத்து செய்துள்ளார். தங்களின் பெண்ணை ஏற்றுக் கொள்ளும்படி ரூபியின் வீட்டார் கெஞ்சியும் அவர் மனம் இரங்கவில்லை.

இதனையடுத்து ரூபியின் வீட்டினர் நதீமின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, அவர்கள் கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதனால் ரூபியின் வீட்டார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து நதீம் மற்றும் அவரது உறவினர்கள் 8 பேர் மீது போலீசார் வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். இருந்தும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு, சட்டமாக நிறைவேற்றிய சில நாட்களிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE