மதுரை : ''நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் வரும் தண்ணீரை வைகையில் திறந்து விட வேண்டும்,'' என, மத்திய அரசின் நதிநீர் இணைப்பு கமிட்டி உறுப்பினர் ஏ.சி.காமராஜ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் சுருளி, மேகமலை, மஞ்சளாறு மற்றும் கிளை நிதிகள் மூலம் வைகையில் நீரோட்டம் அதிகரித்துள்ளது. இயற்கையாக கிடைக்கும் இந்த தண்ணீரை திறந்து விட வேண்டும். முதல்வராக இருந்த காமராஜர் வைகை அணையை கட்டிய போது, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள், 'அணை கட்டினால் இயற்கையாக வரும் தண்ணீர் தடைபடும்,' என்றனர்.
ஆனால் காமராஜர், ''எக்காரணம் கொண்டும் இயற்கையாக வரும் தண்ணீர் தடைபடாது. வெள்ளம் ஏற்படும் போது மட்டுமே அணையில் நீர் தேக்கப்படும்,'' என்றார். இதற்காக அரசாணை பிறப்பித்து, இயற்கையாக வரும் நீரை திறக்க தனியாக மதகையும் நிறுவ செய்தார். பின் வந்த அதிகாரிகள் 2010ல் இயற்கையாக வரும் தண்ணீரையும் அடைத்து வைக்க அரசாணை பெற்று விட்டனர். இதனால் வைகையில் இயற்கையாக வரும் நீர் தடைபட்டுள்ளது. வைகையில் நீரோட்டம் தொடர்ந்து இருந்தால் தான் நிலத்தடி நீர் உயரும். கால்நடை களுக்கு தண்ணீர் கிடைக்கும் என கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE