கொச்சி: கேரளாவில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரி லுாசி கலப்புரா, கான்வென்டில் சிறை வைக்கப்பட்டு உள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
பஞ்சாப் ஜலந்தரை சேர்ந்த , பிஷப் பிராங்கோ மூலக்கல் என்பவர் தனக்கு கீழ் பணியாற்றிய கேரள கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் சிக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி லுாசி என்ற கன்னியாஸ்திரி, மேலும் சில கன்னியாஸ்திரிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார்.

தொடர்ந்து, லுாசியின் வாழ்க்கை முறை குறித்து புகார் கூறப்பட்டதையடுத்து ரோமன் கத்தோலிக்க தேவாலாயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எப்.சி.சி. எனப்படும் ‛பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட்' சபையிலிருந்து, விளக்கம் அளிக்கும்படி லுாசிக்கு 'நோட்டீஸ்' அனுப்பியது. லுாசி அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என கூறி அவரை சபையிலிருந்து நீக்குவதாக முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. சபையின் முடிவை எதிர்த்து வாடிகனில், லுாசி புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில், லூசி, வெல்லமுன்டா போலீஸ் ஸ்டேசனுக்கு அனுப்பிய புகாரில், கான்வென்டில் சட்ட விரோதமாக நான் சிறை வைக்கப்பட்டுள்ளேன். இதனால், திங்கட்கிழமை (ஆக.,19) காலை, அருகில் உள்ள தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனையில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. நான் தங்கியிருந்த கான்வென்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டுள்ளது. போலீசார் வந்து தான் கதவை திறந்து விட வேண்டி இருந்தது.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். இதனையடுத்து ஐபிசி 242 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE