புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66.
அருண் ஜெட்லிக்கு கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக நடந்து முடிந்த லோக்சபாதேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை.
கடந்த 9-ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று (ஆக.,24) அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிற்பகல் 12.07 மணியளவில் ஜெட்லி உயிரிழந்துவிட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாளை இறுதிச்சடங்கு
அருண் ஜெட்லியின் இறுதிச்சடங்கு நாளை(ஆக.,25) பிற்பகல் 2 மணிக்கு டில்லியில் நடைபெற உள்ளது. தற்போது, உடல், அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளை பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இதன் பின்னர், பேரணியாக, கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE