புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் ரூ.305 கோடி அளவில் மோசடி செய்ததாக சிபிஐ.,யால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். செப்.,5 ம் தேதி கைது செய்யப்பட்ட சிதம்பரம் 17 நாட்களாக திகார் சிறையில் கழித்து வந்தாலும், சிதம்பரத்தின் டுவிட்டர் பக்கம் தொடர்ந்து செயல்பாட்டால் இருந்து வருகிறது.

சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் கருத்து பதிவிடுவதாக குறிப்பிட்டு, தொடர்ந்து கருத்து பதிவிடப்பட்டும், கேள்வி கேட்பவர்களுக்கு பதில் பதிவிடப்பட்டும் வருகிறது.
இதில் நேற்று பதிவிடப்பட்ட டுவீட்டில், எனக்கு தங்க சிறகுகள் முளைத்து, நான் நிலவுக்கு பறந்து சென்று விடுவதாக சிலர் கருதுவது ஆச்சரியமாக உள்ளது. நான் பத்திரமாக தரையிறங்குவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சிதம்பரத்தின் அறையில் இருந்து தலையணை, நாற்காலி நீக்கப்பட்டு விட்டதால் அவருக்கு முதுகுவலி ஏற்பட்டுள்ளதாக கூறி ஜாமின் வழங்கும்படி அவரது தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். அதனை நிராகரித்த கோர்ட், சிதம்பரத்தின் காவலை அக்.,3 வரை நீட்டித்தது. தனக்கு ஜாமின் மறுக்கப்பட்டதன் காரணமாகவே சிதம்பரம் இப்படி டுவீட் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன் அவரது பிறந்தநாளான செப்.,16 அன்று பதிவிட்ட டுவீட்டில், நாட்டின் பொருளாதாரத்தை பற்றி தான் தனது கவலையும், சிந்தனைகளும் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் திகார் சிறையில் இருக்கும் சிதம்பரத்தை, சோனியாவும், மன்மோகன் சிங்கும் சந்தித்தனர். அவர்களுடன் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் தந்தையை சந்தித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், சோனியாவும் மன்மோகன் சிங்கும் எனது தந்தையை பார்த்து, தங்களின் ஆதரவை தெரிவித்தது எனது தந்தைக்கும், எனது குடும்பத்திற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எங்களின் அரசியல் போராட்டத்திற்கு கிடைத்த ஊக்கம் இது என்றார்.
மோடியை கிண்டல் செய்து டுவீட் :
ஹூஸ்டனில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ' எல்லாம் சவுக்கியம்' என உரையை துவக்கினார். இதை கிண்டல் செய்து சிதம்பரம் பதிவிட்டுள்ள டுவீட்டில், "நீண்ட நாட்களுக்கு பிறகு காங்., கட்சி வலிமையாகவும், துணிவுடனும் உள்ளது. நானும் வலிமையாகவும், துணிவுடனும் இருப்பேன். வேலை வாய்ப்பின்மை, வேலையிழப்பு, குறைந்த சம்பளம், வன்முறை தாக்குதல், காஷ்மீரில் ஊரடங்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது தவிர நாட்டில் அனைத்தும் நன்றாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.