சண்டிகர்: பெண் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அரியானா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரியானா சட்டசபைக்கு வரும் 21ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், சர்கி தாத்ரியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அப்போது மோடி பேசியதாவது: நான் தேர்தல் பேரணிக்காக அரியானாவுக்கு வரவில்லை. பாஜ.,வுக்கு பிரசாரம் செய்து, வாக்குகளை கேட்கவில்லை. அரியானாவே என்னை அழைக்கிறது. நான் இங்கு வருவதை என்னாலேயே தடுக்க முடியவில்லை. நீங்கள் எனக்கு அவ்வளவு அன்பைக் கொடுத்திருக்கிறீர்கள்.

இந்த முறை நமக்கு தீபம் கொண்ட தீபாவளி மற்றும் தாமரை கொண்ட தீபாவளி என இரண்டு வகையான தீபாவளி இருக்கிறது. இந்த தீபாவளியை நமது பெண் குழந்தைகளுக்கு அர்ப்பணித்து, அவர்களின் சாதனைகளை கொண்டாட வேண்டும். பெண் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமீபத்தில் சீன அதிபர் ஜின்பிங்கை நான் சந்தித்த போது, அவர், 'டங்கல்' திரைப்படத்தில் இந்தியாவின் குழந்தைகளின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக கூறினார். இதை கேட்டதும் அரியானாவை நினைத்து பெருமை அடைகிறேன். இவ்வாறு மோடி பேசினார்.