வாரணாசி: இந்தியாவின் பார்வையில் வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உ.பி., மாநிலம் வாரணாசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அமித்ஷா பேசியதாவது:
வீர சாவர்க்கர் மட்டும் இல்லையென்றால் 1857ம் ஆண்டு நடந்த முதல் இந்திய சுதந்திர போர் வரலாற்றில் ஆங்கிலேயர்களின் பார்வையில் தான் பதிவாகி இருக்கும். அது தான் நமக்கும் தெரிந்திருக்கும். முதல் இந்திய சுதந்திர போர் என்ற வார்த்தையை கூறியவர் சாவர்க்கர் தான். இல்லையெனில் நமது குழந்தைகள் ஆங்கிலேயேர்களுக்கு எதிரான கலகம் என்று தான் எண்ணியிருப்பார்கள். யாரையும் புண்படுத்தாமல் இந்திய வரலாற்றை இந்தியாவின் பார்வையில் மீண்டும் எழுதப்பட வேண்டும்.

இங்குள்ள வரலாற்று அறிஞர்களிடம் இதனை கேட்டுக் கொள்கிறேன். நமது பார்வையில் இருந்து நம் வரலாற்றை எழுதுவது கடமை. எவ்வளவு காலம் தான் நாம் ஆங்கிலேயேர்களை குறை சொல்லிக்கொண்டிருக்க போகிறோம்.
நமக்கு யாருடனும் எந்தவித மோதலும் இல்லை. எனவே உண்மையை எழுத வேண்டிய தருணம் இது. தற்போதைய தலைமுறைக்கு விக்கிரமாதித்யா போன்ற மாமன்னர்களை தெரிவதில்லை. ஏனெனில் அவரை பற்றி எந்த ஆவணங்களும் நம்மிடத்தில் இல்லை. பிரதமர் மோடியின் முயற்சியால் உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்து வருகிறது. உலகளாவிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுவதை உலகமே உற்று நோக்குகிறது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.