''பாதி வழியிலேயே, ரயிலை நிறுத்துறதுக்கு, முருகன் தாங்க காரணம்...'' என்றபடியே,
பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''கடவுள் முருகனை சொல்லுறீரா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''ஆமாங்க... கோவை மாவட்டம், பொள்ளாச்சி வழித்தடத்துல, பாலக்காடு - திருச்செந்துார் இடையே இயங்குற, பயணியர் ரயில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, பாதி வழியிலேயே நிறுத்திடுறாங்க...
''மதுரை கோட்டத்துல, ஏதேதோ வேலை, நடக்கிறதா சொல்லி, ரயிலை பாதி வழியிலேயே நிறுத்திடுறாங்க... தென்மாவட்ட மக்களுக்கு பயன்படுற ரயிலுக்கு, ஏன் ஆண்டுக்கணக்குல முட்டுக்கட்டை போடுறாங்கன்னு, விஷயம் வெளியே கசிய ஆரம்பிச்சுருக்குங்க...
''அதாவது, தமிழகத்துல பிரபல ஆன்மிக தலங்களா இருக்கிற, பழநி - திருச்செந்துாருக்கு இடையே, அதிகளவுல ஆம்னி மற்றும் தனியார் பஸ்கள் இயங்குதுங்க...
''ரயில் இயங்கினா, அவர்களின் வருமானம் குறையும் என்பதால, மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகளை, 'கவனிச்சு' ரயிலை, பாதி வழியில் நிறுத்திடுறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''என்கிட்டேயும், அதே மாதிரியான தகவல் ஒண்ணு இருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
''பேஷா... சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கடல் வளத்தை அழிக்கிற, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி, மீன் பிடிக்க, அரசு தடை போட்டுருக்கு... ஆனா, நாகை மாவட்டத்துல பழையார், பூம்புகார் பகுதி விசைப்படகு மீனவர்கள்
பலர், சுருக்குமடி வலையை பயன்படுத்துறதா புகார் இருக்கு வே...
''இது பத்தி, சில மீனவர்கள், மீன்வளத் துறை இணை இயக்குனர் அமல் சேவியர்கிட்ட சொல்லியிருக்காவ... அவரும், தனக்கு கீழ இருக்கற அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுருக்காரு வே...
''ஆனா, என்ன பிரயோஜனம்.... அந்த அதிகாரிகள், சுருக்குமடி படகு உரிமையாளர்கிட்ட பேரம் பேசி, லட்சக்கணக்குல பணத்தை கறந்துட்டு கம்முன்னு இருந்துடுதாவ வே...
''சுருக்குமடி வலை பத்தியும், மோசடி அதிகாரிகள் பத்தியும், மீன்வளத்துறை
அமைச்சர் வரை புகார் அனுப்பியும், எந்த பலனும் இல்லைன்னு, மீனவர்கள் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்க, வசூல் வேட்டையில இறங்கிட்டா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.
''ஆஹா... ஆரம்பிச்சுட்டாங்களா பா...'' என, 'கமென்ட்' அடித்தார், அன்வர்பாய்.
''தி.மு.க., சார்புல, திருவாரூர் பக்கத்துல, கருணாநிதி அருங்காட்சியகம் அமைக்க போறா... இதுக்காக, கட்சி, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள்கிட்ட இருந்து, ஒரு மாத சம்பளத்தை, தி.மு.க., மேலிடம் வாங்கிட்டு வரது ஓய்...
''எம்.எல்.ஏ.,வின் மாதச் சம்பளம், 1.05 லட்சம் ரூபாய்; எம்.பி.,யின் மாதச் சம்பளம், 2 லட்சம் ரூபாய்... தி.மு.க.,வுக்கு, 20 லோக்சபா, ஐந்து ராஜ்யசபா எம்.பி.,க்களும், 100 எம்.எல்.ஏ.,க்களும் இருக்கா ஓய்...
''கணக்கு பார்த்தா, 1.55 கோடி ரூபாய் வசூலாகும்... இதுக்காக, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மா பேருல, ஒரு அறக்கட்டளை துவக்கியிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''எங்ககிட்டேயும் கேட்பாங்களா...'' எனக் கேட்டார், நாயர்.
''தி.மு.க., ஆளுங்கட்சியா இருந்தா, கண்டிப்பா வாய்ப்பு இருக்கு பா...'' என்றபடியே, அன்வர்பாய் நடையை கட்டினார்; நண்பர்களும் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.