சென்னை:தண்ணீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து, ஆராய்ச்சி செய்த மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு, 'தண்ணீர் விருது' வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும், வறட்சி, தண்ணீர் தட்டுப்பாடு, வெள்ளம், அணைகள் உடைப்பு என, பல பிரச்னைகள் உருவாகின்றன.கிடைக்கும் தண்ணீரை சரியாக கையாளாமல், அவற்றை அசுத்தப்படுத்தி, பயன்படுத்த முடியாத நிலை, பல இடங்களில் நிலவுகிறது.மேலும், தட்ப வெப்ப நிலை மாற்றங்களால், மழை பொழியும் காலமும் மாறுகிறது. சில நேரங்களில், அதிக கனமழையும், சில நேரங்களில், மழையின்றி வறட்சியான நிலையும் ஏற்படுகிறது. இந்நிலையை போக்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ரசாயன பொருட்களின் பயன்பாட்டை குறைத்தல், தண்ணீர் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளில், உலக நாடுகள் இறங்கியுள்ளன. அந்த வரிசையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், தண்ணீரை சேகரிக்கவும், தண்ணீரை சுத்தமாக பயன்படுத்தும் வகையிலும், வீணாகாமல் பாதுகாக்கும் வகையிலும், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இந்நிலையில், தண்ணீர் சேமிப்பு பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு, தண்ணீர் விருது வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.இதில், கல்லுாரி மற்றும் பல்கலைகளின் மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்கலாம் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், தங்களது தண்ணீர் சேகரிப்பு மற்றும் ஆராய்ச்சி குறித்த செயல் விபரங்களை, மத்திய நீர்வள ஆணையத்துக்கும், யு.ஜி.சி.,க்கும், நவம்பர், 30க்குள் அனுப்பும்படி, பல்கலைகழக மானிய குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE