சென்னை: சென்னை அருகே பசுவின் வயிற்றில் 52 கிலோ அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை மருத்துவர்கள் அகற்றினர்.

இயற்கை வளங்களுக்கும், உயிர்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் கேடு ஏற்படுத்துகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஜன., 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இன்றுவரையில் முழுமையாக கட்டுப்படுத்த அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, பிளாஸ்டிக் பயன்பாடு வழக்கம்போல் தான் இருக்கிறது.
இந்நிலையில், சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்கு சொந்தமான பசு, சில நாட்களாக சாணம் மற்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிக்குள்ளானது. இதனால், மிகுந்த சிரமத்திற்கு உள்ளான பசு நோய்வாய்ப்பட்டது.

இதனையடுத்து, பசுவை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு முனிரத்தினம் அழைத்து சென்றார். அங்கு பசுவை பரிசோதித்த டாக்டர்கள், வயிற்றில் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின், கழிவுகளை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த அறுவை சிகிச்சையில் பசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். அறுவை சிகிச்சை முடிந்து தற்போது பசு, நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்து இந்த பசுவிற்கு மட்டுமல்ல, மற்ற உயிர்கள் மற்றும் இயற்கை வளங்களுக்கும் தான் என்பது பிளாஸ்டிக் பயன்படுத்தும் மக்களுக்கு என்று புரிய போகிறதோ.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE