ராமநாதபுரம் : முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக, அரசு ஊழியர் லஞ்சமாக பெற்ற பணத்தை, பொதுமக்கள் முன்னிலையில், ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் திருப்பி கொடுக்க வைத்தார்.
ராமநாதபுரம் அருகே, மாடக்கொட்டான் கிராமத்தைச் சேர்ந்தவர், தங்கராஜ், 65. நேற்று நடந்த, மக்கள் குறைதீர் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை கேட்டு, கலெக்டர் வீரராகவ ராவிடம் மனு அளித்தார்.அப்போது, அவர், 2018ல், ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில், முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக, சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு உதவியாளர் மாரியிடம், 1,000 ரூபாய் லஞ்சம் வழங்கியதாகவும், அவர் உதவித்தொகை வாங்கி தராமல் அலைய விடுவதாகவும் தெரிவித்தார்.
கலெக்டர், உடனே மாரியை அழைத்து, 'லஞ்சமாக, 1,000 ரூபாய்வாங்கினீர்களா' என கேள்வி எழுப்பினார். அவரும், 'ஆமாம்' என தலையசைத்தார்.இதையடுத்து, அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில், லஞ்சப் பணம், 1,000 ரூபாயை தங்கராஜிடம் திருப்பி வழங்க, மாரிக்கு உத்தரவிட்டார். இதன்படி, 1,000 ரூபாயை, முதியவரிடம் மாரி வழங்கினார்.
மாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கவும், கலெக்டர்உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE