புதுடில்லி: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, சன்னி வக்ப் வாரியம், சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால், சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது' என, சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அயோத்தி வழக்கு தொடர்பாக, சட்ட நிபுணர்கள் கூறியதாவது:அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, பாதிக்கப்பட்ட தரப்பினர், சிவில் நடைமுறை சட்டப் பிரிவு, 114ன் கீழ், சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியும்.

ஆனால், சீராய்வு மனு விசாரணைக்கு வரும்போது, மீண்டும் முழுமையான வாத, பிரதிவாதங்கள் எதுவும் நடக்காது.சீராய்வு மனு தொடர்பான விசாரணை, நீதிமன்றத்தில் நடக்காது. நீதிபதிகளின் அறையில் மட்டுமே நடக்கும். மிகவும் அரிதிலும், அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே, நீதிமன்றத்தில் சீராய்வு மனு மீதான விசாரணை நடக்கும்.
வழக்கில் ஏற்கனவே தீர்ப்பளித்த நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தான், சீராய்வு மனு விசாரணைக்கு வரும். அதனால், சீராய்வு மனுவை ஏற்று, ஏற்கனவே அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்பு, மிகவும் குறைவு.சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்பே அதிகம்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வரும், 17ல் ஓய்வு பெறவுள்ளார். எனவே, சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, அது விசாரணைக்கு வந்தால், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு பதிலாக, வேறு ஒரு நீதிபதி, அந்த அமர்வில் இடம் பெற வாய்ப்புள்ளது. அந்த நீதிபதி யார் என்பதை, மற்ற நான்கு நீதிபதிகள் முடிவு செய்யலாம். இவ்வாறு சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE