மதுரை, பிற மாநிலங்களிலிருந்து பெரிய இயந்திரப் படகுகளில் வந்து தமிழக கடல் எல்லையில் மீன்பிடிக்கத் தடை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.கன்னியாகுமரி மாவட்டம் துாத்துார் மண்டல மீன் வியாபாரிகள் சங்க தலைவர் அந்தோணி பிச்சை தாக்கல் செய்த பொதுநல மனு:தேங்காய்பட்டிணம்-இறைமன்துறை மீன்பிடி துறைமுகம் கடல் பகுதியில் நீரோடி, மிடாலம் உள்பட 15 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட குதிரை சக்தி திறன் கொண்ட மோட்டார் படகுகளை பயன்படுத்துகின்றனர்.இத்துறைமுக பகுதியில் கேரளாவைச் சேர்ந்த சிலர் அனுமதியின்றி அதிக குதிரை சக்தித் திறன் கொண்ட பெரிய இயந்திரப் படகுகள் மூலம் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். நமது கடல்வளம் மற்றும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படும். பிற மாநிலங்களிலிருந்து பெரிய இயந்திரப் படகுகளில் வந்து தமிழக கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க அனுமதிக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்தோ ணி பிச்சை மனு செய்தார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு கன்னியாகுமரி கலெக்டர், எஸ்.பி., வடசேரி மீன்வளத்துறை துணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி டிச.,12க்கு ஒத்தி வைத்தது.