சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவை வெளியேற்ற முயற்சி நடப்பதாக கூறி, பிரசாத் ஸ்டுடியோவை, பாரதிராஜா, பாக்கியராஜ் உள்ளிட்ட இயக்குனர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, சாலிகிராமத்தில், பிரசாத் ஸ்டுடியோ உள்ளது. அங்கு, சினிமா படப்பிடிப்பு, 'எடிட்டிங்' உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்டுடியோவின் ஒரு பகுதி, நட்பின் அடிப்படையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
அவர் அங்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இசைக்கூடம் அமைத்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தற்போது, 'பிரசாத் ஸ்டுடியோ' நிர்வாகம், வேறு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இளையராஜாவை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சி நடக்கிறது.
'இசைக்கூடத்தை காலி செய்ய அவகாசம் வேண்டும்' என, இளையராஜா தரப்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. ஆனால், உடனடியாக காலி செய்ய வேண்டும் என, பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் கூறுவதால், இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேச்சு நடத்த, பிரசாத் ஸ்டுடியோவுக்கு, நேற்று இயக்குனர்கள பாக்கியராஜ், ஆர்.கே.செல்வமணி, பாரதிராஜா, சீமான் ஆகியோர் சென்றனர். அப்போது, 'சீமான் உள்ளே வர அனுமதிக்க முடியாது' என, பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தினர் தெரிவித்து விட்டனர்.
இதனால், மற்ற இயக்குனர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள், முற்றுகை போராட்டம் நடத்தினர். பின், போலீஸ் பாதுகாப்புடன், பாரதிராஜா, சீமான், பாக்கியராஜ், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட சிலர், ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்கப் பட்டனர்.
பேச்சு நடத்திய பின், பாரதிராஜா கூறியதாவது:நாங்கள் இருதரப்பினரிடமும் சுமூகமாக பேசி, பிரச்னையை தீர்க்கவே விரும்புகிறோம். இளையராஜாவை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சி நடப்பது ஏற்க இயலாது. அவருக்கு அவகாசம் வேண்டும். அதற்குள் நாங்கள் இளையராஜாவுக்கு மற்றொரு இடத்தை ஏற்பாடு செய்வோம். நான்கு நாட்களில் இறுதி முடிவு எடுத்து, பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திடம் தெரிவிப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.