விழுப்புரம், :கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டு, கோர்ட் பிடியாணையில் இருந்து தலைமறைவான ரவுடியை போலீசார் கைது செய்தனர்.சென்னையில் பல்வேறு கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டு கோர்ட் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி விழுப்புரம் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக சென்னை போலீசார் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் கொடுத்தனர்.
எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் கஞ்சனுார் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நேமூர் பஸ் நிலையம் அருகே வேலியந்தல் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரிடம் வழிப்பறி செய்த நபரை கையும் களவுமாக பிடித்தனர்.
விசாரணையில், செஞ்சி அடுத்த கவரை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரகாஷ் என்கிற வெள்ளை பிரகாஷ், 38; என்பதும், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன் கூட்டாளி என்பதும் தெரியவந்தது.
மேலும், பிரகாஷ் மீது பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சென்னை போலீசாரால் தேடப்பட்டு வந்த கோர்ட் பிடியாணை பிறப்பித்த குற்றவாளி என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பிரகாஷிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE