தர்மபுரி: 'காலைக்கதிர்' சார்பில், 'வெற்றியின் ரகசியம்' நிகழ்ச்சி, தர்மபுரியில் இன்று நடக்கிறது. அதில், புது பாடத்திட்டத்தில் உள்ள சிரமங்கள் களையப்பட்டு, பொதுத்தேர்வில் சாதிக்க, பல்வேறு ஆலோசனை கிடைக்கும் என்பதால், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பொதுத்தேர்வு என்றாலே, நன்றாக படிக்கும் மாணவர்களிடம் கூட, ஒரு பதற்றம் இருக்கும். நடப்பு கல்வியாண்டில், புது பாடத்திட்டம், புது வினா வடிவமைப்பு உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதையெல்லாம் சமாளித்து, சாதனையாளராக மாறும் ரகசியத்தை, 'காலைக்கதிர்' நாளிதழ், உங்களுக்கு கற்றுத்தர, 'வெற்றியின் ரகசியம், ஜெயிப்பது நிஜம் 2.0' நிகழ்ச்சியை, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, 'அமிர்தா விஸ்வ வித்யாபீடம்' நிறுவனத்துடன் இணைந்து, இன்று தர்மபுரியில் நடத்துகிறது. பென்னாகரம் சாலையிலுள்ள, செங்குந்தர் திருமண மண்டபத்தில், காலை, 9:30 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கல்வி ஆலோசகர்கள், பாடத்திட்ட தயாரிப்பு குழுவில் இடம்பெற்ற ஆசிரியர்கள், அமிர்தா விஸ்வ வித்யாபீடம் நிறுவன பேராசிரியர்கள், தன்னம்பிக்கை ஊட்டும் வல்லுனர்கள் பங்கேற்கின்றனர். புது பாடத்திட்டம் குறித்து, தர்மபுரி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் வாசுதேவன், மனநலம் மற்றும் உடல் நலம் குறித்து, சேலம் உளவியல் நிபுணர் அமுல்ராஜ் ஆகியோர் பேசுகின்றனர். இதில், புது பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளல்; தேர்வு நேரங்களில் உடல்நலம், மனநலத்தை பாதுகாத்தல்; பல்வேறு நுழைவுத்தேர்வுகளுக்கு தயாராகும் விதம்; மனப்பாடம் செய்யாமல் புரிந்து கற்று, மதிப்பெண்களை அள்ளும் வித்தை; தேர்வின்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்; தேர்வு நேரத்தில் செய்ய வேண்டிய பணி உள்ளிட்டவை குறித்து, ஆலோசனை வழங்குவர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு, முக்கிய வினாக்கள், குறிப்பு அடங்கிய புத்தகம், இலவசமாக வழங்கப்படும். அனுமதி இலவசம் என்பதால், அரசு, தனியார் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர், தங்கள் பெற்றோர், ஆசிரியர்களுடன் பங்கேற்று பயனடையலாம். அத்துடன், புது பாடத்திட்டத்தில் உள்ள சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள, 'காலைக்கதிர்' உங்களை அன்போடு அழைக்கிறது.