கம்பம்:2021 க்குள் குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே இலக்கு என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்டம் சார்பில் தேனி மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கம்பத்தில் நடந்தது. கலெக்டர் பல்லவிபல்தேவ் தலைமை வகித்தார். ஜக்கையன் எம்.எல்.ஏ., வரவேற்றார். துணை முதல்வர பேசியதாவது :குடிசை வீடுகளை ஆர்.சி வீடுகளாக மாற்ற முன்னாள் முதல்வர் ஜெ., 2013ல் உத்தரவிட்டு, ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்தார். ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் குடிசைகளை, ஆர்.சி. வீடுகளாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 6 லட்சம் கான்கிரீட்வீடுகள் வழங்கப்பட்டுஉள்ளன.
தேனி மாவட்டத்தில் 3 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. 2021 க்குள் குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்கும் ஜெ.,யின் கனவு எங்கள் இலக்காக உள்ளது. மாவட்டத்தில் 6 ஆயிரத்து 904 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 2 ஆயிரத்து 619 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு பேசினார். 2,619 பயனாளிகளுக்கு ரூ. 5 கோடியே 68 ஆயிரத்து 358 க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திட்ட இயக்குனர் திலகவதி, சப்கலெக்டர்கள் வைத்திநாதன், சிநேகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.